அம்ரித்பால் சிங் தேடுதல் வேட்டையால் அதிரும் பஞ்சாப்: இணையம் முடக்கம், 78 பேர் கைது, துப்பாக்கிகள் பறிமுதல்

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம், Getty Images

'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிக்க பஞ்சாப் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் அந்த அமைப்பினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சனிக்கிழமை இரவு வரை இந்த அமைப்பைச் சேர்ந்த 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் பிடித்து விசாரிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக, ஜலந்தர், ஷாகோட் ஆகிய பகுதிகளில் போலீஸ் குழுக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி வரையிலான காலத்துக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் துப்பாக்கிகள், வாள்களுடன் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் பஞ்சாப் காவல் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, ஒரு கைதியை விடுதலை செய்ய வலியுறுத்திய சம்பவம் இந்தியா முழுவதிலும் அதிர்வலையை கிளப்பியது.

இந்த சம்பவத்தை அடுத்து, அம்ரித்பால் சிங் குறித்தும், காலிஸ்தான் பிரிவினை கோரிக்கை தொடர்பாகவும் விவாதங்கள் சூடுபிடித்தன.

இந்நிலையில், பஞ்சாப் காவல்துறை அம்ரித்பால் சிங் மீது பெரும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது தவிர, பஞ்சாப் காவல்துறையிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை என்று பிடிஐ தெரிவித்துள்ளது.

"ஜலந்தரின் மிஹாத்பூர் கிராமத்தில் அம்ரித்பாலின் வாகனத் தொடர் தடுக்கப்பட்டது. அம்ரித்பால் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், ஆனால் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது," என்று கூறியுள்ளது பிடிஐ.

இந்த போலீஸ் நடவடிக்கையை ஒட்டி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸ் விரட்டுவதாக காட்டும் உறுதி செய்யப்படாத வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக எந்த விவரத்தையும் போலீஸ் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

இதனிடையே அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் மொஹாலியில் விமான நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த நகரம் தலைநகர் சண்டிகர் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்கள் பறிமுதல்

சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஜலந்தர் மாவட்டத்தில் ஷா கோட் மல்சியன் சாலையில் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

அம்ரித்பால் சிங் இன்னும் தப்பி ஓடிவருவதாகவும், அவரைப் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 9 துப்பாக்கிகள், 373 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அம்ரித்பால் சிங் மீதான காவல்துறை நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் ரவ்னீத் பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தானை உருவாக்க இளைஞர்கள் ஆயுதம் எடுக்கவேண்டும் என்று கூறினார். தற்போது அவர் பின்வாங்குகிறார். சீக்கிய மதத்தை புகழ்ந்துகொண்டிருந்த ஒருவர் தற்போது ஓடி ஒளிகிறார் என்று அவர் கூறியிருந்தார்.

"தாமதமாக எடுக்கப்பட்டாலும், பஞ்சாப் காவல்துறையின் நடவடிக்கையை வரவேற்கிறேன்" என்று காங்கிரஸ் தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ட்வீட் செய்துள்ளார்.

"அனைத்து பஞ்சாபியர்களும் அமைதி காக்கவேண்டும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாடிங் , குருவின் உண்மையான சீடர்களான சீக்கியர்கள் ஓடி ஒளிவதில்லை என்று குறிப்பிட்டார். அழுத்தத்துக்கு நடுவே பஞ்சாப் காவல்துறை தன் வேலையைச் செய்கிறது. பஞ்சாபியர் அனைவரும் அமைதி காக்கவேண்டும்," என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: