அமெரிக்கா - இஸ்ரேல் உறவு குறித்து அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
பாலத்தீன பிரதேசங்களில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான "பதற்றமான" நிலை என்று வர்ணித்த செய்திகளை அரபு பிராந்திய ஊடகங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இறையாண்மையை வழங்கும் மசோதாவிற்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் ஆரம்பகட்ட ஒப்புதல் அளித்த பின்னர், அமெரிக்கா வெளிப்படுத்தும் "கடுமையான தொனி" மற்றும் "கோபம்" குறித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
இடதுசாரி சார்புடைய இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸின் கூற்றுப்படி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் வருகையின் போது இந்த மசோதாவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான அவிக்டோர் லிபர்மேன் மற்றும் அவி மாவோஸ் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
ஜே.டி வான்ஸின் விமர்சனத்தை முன்னிலைப்படுத்திய பெரும்பாலான அரபு ஊடகங்கள், இந்த நடவடிக்கையை "மிகவும் முட்டாள்தனமான அரசியல் தந்திரம்" என்றும், இணைப்பு முயற்சி காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்தன.
"இந்த மசோதா, என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்துகிறது. இஸ்ரேல் மேற்குக் கரையை இணைக்கப் போவதில்லை" என்று வான்ஸ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
காஸா அமைதி ஒப்பந்தம்
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய அரபு தொலைக்காட்சி சேனல்கள், மேற்குக் கரையை இணைக்கும் முயற்சிக்கு அமெரிக்க எதிர்ப்பை தங்கள் காலை செய்திகளில் தலைப்புச் செய்திகளாக்கின.
அபுதாபியை தளமாகக் கொண்ட ஸ்கை நியூஸ் அரேபியா தனது காலை முதன்மைச் செய்தியில், மேற்குக் கரையை இணைக்கும் முயற்சிக்கு டிரம்பின் நிர்வாகம் "கடுமையான ஆட்சேபனை" தெரிவிப்பதாகவும், எனவே இஸ்ரேல் அத்தகைய நடவடிக்கையை எடுக்காது என்று கூறியது.
"மேற்குக் கரையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இஸ்ரேல் மேற்குக் கரையை எதுவும் செய்யப் போவதில்லை" என டிரம்ப் கூறியதாக மேற்கோள்காட்டி ஸ்கை நியூஸ் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் இணைப்புத் திட்டங்களைத் தொடர முயன்றால், அது அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளதாக அந்த சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. அரபு நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற டிரம்ப் உறுதிபூண்டுள்ளதாகவும், இணைப்பதை ஒரு 'சிவப்புக் கோடு' என்று கருதுவதாகவும் அந்த சேனல் கூறியது.
ஸ்கை நியூஸ் அரேபியா, அக்டோபர் 23 அன்று ஒளிபரப்பாகும் அல் தாசியா (இரவு 9:00 மணி) நிகழ்ச்சியில், டிரம்பின் இந்த எச்சரிக்கை "அரசியல் அறைகூவல்" என்றும், நெதன்யாகுவுக்கு ஒரு "புதிய சோதனை" என்று கூறியது.
கத்தாரின் அல் ஜசீரா தொலைக்காட்சி சேனல் தனது காலை செய்தியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடத்தை 'காஸா அமைதி ஒப்பந்தத்தை முறிக்கக்கூடும்' என்று வெள்ளை மாளிகை கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.
டிரம்பின் திட்டங்களை நெதன்யாகு சீர்குலைத்தால், அவர் 'தண்டிக்கப்படுவார்' என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நெதன்யாகு மீதான கோபம்
பல பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் அமெரிக்காவில் இஸ்ரேலிய பிரதமர் மீதான 'வளர்ந்து வரும் கோபத்தை' எடுத்துக்காட்டின.
'டிரம்ப் இதற்கு முன்பு ஒருபோதும் நெதன்யாகு மீது இவ்வளவு கோபமாக இருந்ததில்லை' என்று வெள்ளை மாளிகை வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஐக்கிய அரபு அமீரக வலைத்தளமான ஈராம் நியூஸ் தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களுக்கும் இடையே ஒரு "இடைவெளி" இருப்பதாக கூறும் அந்த செய்தியறிக்கை, "மத்திய கிழக்கு நாடுகளுடன் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்குவதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய டிரம்ப் விரும்புகிறார். ஆனால், "பதற்றங்களை அதிகரிப்பதன் மூலமும் போரை நடத்துவதன் மூலமும்" இஸ்ரேலின் பாதுகாப்பு அடையப்படுகிறது என்று நெதன்யாகு நம்புகிறார்." என்று கூறுகிறது.
செளதி செய்தித்தாள் அஷார்க் அல்-அவ்சாத் தனது முக்கிய தலைப்புச் செய்தியில், 'மேற்குக் கரையை இணைப்பதற்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு இஸ்ரேலுக்கு ஒரு அடியைக் கொடுத்துள்ளது' என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் 'கட்டுப்பாட்டை மீறிவிட்டது'
ரஷ்யாவின் ஆர்டி (RT) அரபு சேனல் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான "வளர்ந்து வரும் பதற்றங்களை" குறிப்பிட்டுக்காட்டி, "இஸ்ரேல் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது" என அமெரிக்க அதிகாரிகளின் கருதுவதாக தெரிவித்திருக்கிறது.
பாலிடிகோ செய்தி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டும் ஆர்டி அரபு சேனல், காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தின் எதிர் தாக்குதல் மற்றும் மேற்குக் கரை இணைப்பிற்கு ஆதரவாக இஸ்ரேலிய நாடாளுமன்றம் வாக்களித்தது உள்ளிட்ட சமீபத்திய இஸ்ரேலிய நடவடிக்கைகளால் அமெரிக்காவில் "எரிச்சல் அதிகரித்து வருவதாக" கூறுகிறது. மேலும் டிரம்பின் கூற்றுப்படி இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகள், "பலவீனமான இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தத்தை பாதிக்கும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 23-ஆம் தேதி வெளியான மற்றொரு செய்தியில் , டைம் பத்திரிகைக்கு டிரம்ப் அளித்த பேட்டியை ஆர்டி அரபிக் ஊடகம் சுட்டிகாட்டுகிறது. அதில் அவர் நெதன்யாகுவிடம், "நீங்கள் முழு உலகத்தையும் எதிர்த்துப் போராட முடியாது. சில போர்களில் வெல்லலாம், ஆனால் உலகம் உங்களுக்கு எதிராக உள்ளது, மேலும் இஸ்ரேல் உலகத்துடன் ஒப்பிடும்போது மிகச் சிறிய நாடு." எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அல்-குத்ஸ் அல்-அரபி செய்தித்தாளும் டைம் நேர்காணலை முக்கியமானதாக வெளியிட்டது.
அதன் சாரம்சம், 'அமெரிக்கா இப்போது அதன் நட்பு நாடான இஸ்ரேலைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, இதனால் அது அரபு நாடுகளுடனான அதன் உறவுகளை வலுப்படுத்த முடியும்' என்று நினைப்பதை தெளிவாகக் காட்டுகிறது என்று அல்-குத்ஸ் அல்-அரபி செய்தித்தாள் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












