You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் கொரியா: தளர்த்தப்பட்ட ராணுவ ஆட்சி, மக்கள் போராட்டம் - அழுத்தத்தில் அதிபர்
தென் கொரியாவில் நேற்றிரவு அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சி இன்று (டிச.4) திரும்பப் பெறப்பட்டது. ஆனால், மக்கள் தொடர்ந்து அதிபர் யூன் சாக் யோல் பதவியில் இருந்து விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது கட்சியினரே அவரைக் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அவரைக் கட்சியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளதால் அவர் அழுத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
முன்னதாக, நேற்று (டிச.3) தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் அறிவித்திருந்தார். அங்கு கடந்த 1979ஆம் ஆண்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு தென் கொரியாவில் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது இதுவே முதல்முறை. இதனால் நாடாளுமன்ற கட்டடம் அருகே மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது தொலைக்காட்சி உரையில் யூன் சாக் யோல் (டிச.3) அன்று கூறினார்.
மேலும், ராணுவச் சட்டத்தை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதிபர் யோல் கூறியிருந்தார்.
ராணுவ ஆட்சியை அறிவிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையைத் தடுக்க தென் கொரிய நாடாளுமன்றம் வாக்களித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நாட்டின் ஆளும் மற்றும் எதிர்கட்சினர் இந்த அறிவிப்பை எதிர்த்தனர்.
இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், நாடாளுமன்றத்தில் திரளுமாறு நாட்டு மக்களுக்கு (டிச.3) அன்று அழைப்பு விடுத்திருந்தார்.
போராட்டக்காரர்கள் கூடுவதைத் தடுக்க தலைநகர் சோலில் உள்ள நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் நேற்று போலீஸ் குவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற கட்டடத்திற்கு (டிச.3) அன்று விரைந்த போராட்டக்காரர்கள் ''ராணுவ ஆட்சி இல்லை! ராணுவ சட்டம் இல்லை" என்று கோஷமிட்டனர். அவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அழுத்தத்தில் அதிபர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் யூன் சாக் யோலின் கட்சி நடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் தீர்மானங்களுக்கு எதிராக அவரது அரசு போராடி வந்தது.
அரசியல் தாக்குதல்களைத் தடுக்கும் ஜனநாயக விரோத உக்தியாக, ராணுவ ஆட்சியை அறிவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார் என்று அரசியல் நோக்கர்கள் கூறினர்.
அவசரக் காலத்தில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட தலைவர்கள் செயல்பட முடியாது எனக் கருதப்படும்போது, ராணுவ சட்டத்தின் கீழ் தற்காலிக ராணுவ ஆட்சி அமைக்கப்படும்.
தென் கொரியாவில் கடைசியாக 1979இல் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. நீண்ட கால அதிபர் ஆட்சிக் கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)