பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக முடியுமா? இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?

பங்குச் சந்தை, முதலீடு, பணம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா
    • பதவி, பிபிசிக்காக

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. சந்தையில் நீங்கள் எப்படி கணக்கு தொடங்க வேண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும் என அனைத்தையும் கற்றுத் தர ஆன்லைன் கருத்தரங்கம், மொபைல் போன் செயலி என பல அம்சங்கள் தற்போதைய தலைமுறைக்கு கிடைக்கின்றன.

1990களில் ஒரு கணினி புரட்சி என்று விவரிக்கப்பட்டதைப் போல தற்போதைய காலகட்டத்தை ஒரு சந்தைப் புரட்சி என்று விவரிப்பது மிகையாகாது.

இதன் விளைவாக, சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் இருந்து கடந்தாண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றனர்.

கடந்த காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது சந்தை நஷ்டத்தில் சென்றது.

ஆனால், இந்த முறை அத்தகைய இழப்புகள் அதிகம் காணப்படவில்லை. ஏனெனில் 2022ஆம் ஆண்டில், உள்நாட்டு சிறு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்(mutual funds) வடிவில் செய்த முதலீடு ரூ.74,000 கோடியாகும்.

இதிலும் எஸ்ஐபி(SIP) மூலம் செய்யப்படும் முதலீடு முக்கிய காரணியாக இருக்கிறது.

தனிநபர் நிதி மேலாண்மை குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்தாலும், இன்னும் சிலருக்கு முதலீடுகள் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது.

பிரபல நடிகர் அர்ஷத் வர்ஸி குறித்த சர்ச்சை சமீபத்தில் வெளியானது. யூடியூப் சேனலை அடிப்படையாகக் கொண்ட அந்த மோசடியில் பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்தனர்.

இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் தடுக்க, தனிநபர் நிதி திட்டமிடலின் (personal finance planning) சில அடிப்படை அம்சங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

செலவு அல்லது முதலீடு

பங்குச் சந்தை, முதலீடு, பணம்

பட மூலாதாரம், Getty Images

நமது வங்கிக் கணக்கிலிருந்து நாம் எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் செலவழிக்கப்படுகிறதா அல்லது முதலீடு செய்யப்படுகிறதா என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிட்ட பிற ஆடம்பரங்களுக்கான செலவு நமது வருமானத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நம் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவரிடம் விலையுயர்ந்த போன் இருந்தால், அதே போனை வாங்கினால் நமக்கு அதிக செலவாகும். ஆனால் அந்த செல்போன் மூலம் நமது எதிர்காலத்திற்கு தேவையான படிப்பு அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள வேலைகளைச் செய்தால் அது ஒரு முதலீடு.

பலர் மற்றவர்களின் உடைமைகள், வாழ்க்கை முறைகளை கவனித்து, தங்கள் வருமானத்தை இதுபோன்ற விஷயங்களுக்கு செலவிடுகிறார்கள். இது நிதி திட்டமிடல் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.

"நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கும் பழக்கம் உள்ளவர்கள், ஒரு நாள் தங்களுக்குத் தேவையான பொருட்களை விற்றுவிடுவார்கள்" என்று வாரன் பஃபெட் கூறியதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

விரைவாக பணம் சம்பாதிப்பதற்கான வழிகள்

பங்குச் சந்தை, முதலீடு, பணம்

பட மூலாதாரம், Getty Images

பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் வலுவான நிதி ஆதாரங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் குறுகிய காலத்தில் அந்த பணத்தை ஈட்டவில்லை.

பங்குச் சந்தை என்பது விரைவாக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தளம் என்ற எண்ணத்தில் பல புதிய முதலீட்டாளர்கள் உள்ளனர். இது முற்றிலும் தவறான கண்ணோட்டம்.

ஏதாவது ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் இரட்டிப்பு லாபமும், இரண்டு ஆண்டுகளில் அதிக லாபமும் கிடைக்கும் என்ற விளம்பரங்களை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். 'ரிஸ்க்' இல்லாத முதலீடு என்று எதுவும் இல்லை. குறுகிய காலத்தில் நிறைய பணம் வருகிறது என்றால் அதிலுள்ள இடர்பாடுகளை(Risk) நாம் கவனிக்க தவறக்கூடாது.

மேலும், எதிர்கால விருப்பங்களைப் பொறுத்தவரை, ஒரு நபர் ஒரு வருடத்தில் தனது முதலீட்டை விட பல மடங்கு அதிக பணத்தை ஈட்டியுள்ளார் என்ற அறிக்கைகளை நாம் காண்கிறோம்.

இவை அதிக ஆபத்துள்ள முதலீட்டு வழிகள் ஆகும்.

தனிநபர் நிதிக் கொள்கைகளின்படி, முதலீடு என்பது ஒரு நீண்ட கால விஷயம் ஆகும்.

நேரத்தை செலவழிக்காமல் பணம் சம்பாதிக்கலாம்

பங்குச் சந்தை, முதலீடு, பணம்

பட மூலாதாரம், Getty Images

பங்குச் சந்தையைப் பற்றிய பல கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. பங்குச் சந்தை என்பது நமது மாத ஊதியத்தைத் தவிர வேறு நிதி ஆதாரங்களை உருவாக்குவதற்கான ஒரு வழியாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம் நேரத்தை செலவழிக்காமல் வருமானம் வரும் என்று சொல்வது சரியல்ல.

முதலீடு செய்வதற்காக முழு அர்ப்பணிப்புடன் வலுவான போர்ட்ஃபோலியோவை (portfolio) நீங்கள் உருவாக்க எடுக்கும் நேரம் மிகவும் மதிப்புக்குரியது.

நமது நிதி இலக்குகள், இடர் சகிப்புத்தன்மை(risk tolerance) பற்றி சிந்திக்க வேண்டும். பின்னர் உங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க வேண்டும்.

இவை அனைத்தும் நம் நேரத்தை எடுக்கும் ஒரு செயல்முறையாகும். ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கிய பிறகும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அந்த போர்ட்ஃபோலியோவின் வருமானத்தைக் கண்காணிக்க வேண்டும்.

எந்தவொரு முதலீட்டு முறையும் எதிர்பார்த்த அளவு வருமானத்தைத் தரவில்லை என்றால், அதை பகுப்பாய்வு செய்து திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நம் நேரத்தை செலவழித்தால் மட்டுமே செய்யக்கூடிய விஷயங்கள்.

பின்வரும் கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிப்பது நமது நிதி திட்டமிடலை முறையாக தொடங்க வழிவகுக்கும்.

கேள்வி பதில்கள்

பங்குச் சந்தை, முதலீடு, பணம்

பட மூலாதாரம், Getty Images

1. ஏதேனும் எதிர்பாராத ஆபத்து, உயிரிழப்பு ஏற்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்க உங்களிடம் நிதி இருப்பு உள்ளதா?

பொதுவாக, இதுபோன்ற எண்ணங்கள் மன உறுதியை குறைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நிதி திட்டமிடல் என்று வரும்போது உணர்ச்சிகளுக்கு இடமில்லை. இது உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பு பற்றியது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் செலவுகளை ஈடுசெய்ய போதுமான ஆயுள் காப்பீட்டை வைத்திருப்பது அவசியம்.

2. சில எதிர்பாராத இடையூறுகள் காரணமாக எனக்கு மாத ஊதியம் தரும் வேலை இல்லையென்றால், தற்போதைய வாழ்க்கை முறையைத் தொடர முடியுமா?

அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, தனியார் ஊழியர்களுக்கு இல்லை. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி பல ஊழியர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் நாம் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஒரு நிதித் திட்டத்தை(financial plan) உருவாக்க வேண்டும்.

3. உங்கள் தற்போதைய நிதி ஆதாரங்கள் உங்கள் குழந்தையின் உயர் கல்விக்கு பணம் செலுத்த போதுமானதா?

இது ஒரு கற்பனையான கேள்வியாகத் தோன்றலாம். ஆனால் தற்போதைய தலைமுறையினரின் வாழ்நாளில் குழந்தைகளின் கல்வியே மிகப்பெரிய செலவு என்றால் அது மிகையாகாது.

பணவீக்கத்தைக் (inflation) கருத்தில் கொண்டு உங்கள் குழந்தையின் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பிற்கான போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

4. உங்கள் ஓய்வுகால வாழ்க்கையை இப்போது இருப்பதைப் போல வசதியாக மாற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளதா?

ஓய்வுகால வாழ்க்கை இன்னும் வெகுதொலைவில் உள்ளது என்ற தவறான எண்ணத்தில் பலர் உள்ளனர். ஆனால், தனிநபர் நிதிக் கொள்கைகளின்படி, தவிர்க்க முடியாத செலவைப் பற்றி நாம் அறிந்தால், அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும்

5. உங்கள் குடும்பத்தில் ஏதேனும் பரம்பரை நோய் உள்ளதா?

இதுவும் மிக முக்கியமானது. ஏனெனில் இத்தகைய நோய் குறைபாடு இருந்தால் நாற்பது வயதுக்கு பிறகு சரி செய்ய முடியாது. அத்தகைய நேரத்தில் காப்பீடு எடுப்பதும் கடினம். எனவே அதிக கவரேஜ் கொண்ட பாலிசியை எடுத்துக்கொள்வது குடும்ப வரலாறு நோய் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல பரிந்துரையாகும்.

காணொளிக் குறிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகம்: சிறப்பம்சங்கள் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: