இலங்கையின் முதல் செயற்கை கடற்கரை - எப்படி உருவாக்கப்பட்டது? என்னென்ன வசதிகள் உள்ளன?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொழும்பில் சீனாவால் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரம் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருக்கும் கடல் பகுதியை மணல் போட்டு நிரப்பி, நிலப்பரப்பாக மாற்றி இந்தக் கடற்கரையை சீனா உருவாக்கி வருகிறது.

சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், துறைமுக நகரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கையின் முதல் செயற்கை கடலை சீனா, துறைமுகத்திற்குள் அமைத்து, அதைத் தற்போது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்துள்ளது.

துறைமுக நுழைவாயிலில் இருந்து சுமார் 3 கி.மீ வரை பயணிக்கும் போது, இந்த செயற்கை கடற்கரையை அடைய முடியும்.

நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி, கொழும்பு துறைமுக நகரத்திற்குச் சொந்தமான மொபைல் செயலியின் ஊடாகப் பதிவு செய்து, அதில் கிடைக்கப் பெறும் கியூ.ஆர் ரகசிய இலக்கத்தைப் பயன்படுத்தி உள்ளே செல்ல முடியும்.

உள்ளே செல்லும்போது, பிரதான வீதியின் இரு புறங்களிலும் கட்டுமானப் பணிகளை அவதானிக்க முடிந்தது. இதையடுத்து, 3 கி.மீ வரை பயணித்ததன் பின்னர் நாம் செயற்கை கடற்கரையை அண்மித்திருந்தோம்.

வாகன தரிப்பிடத்தை அண்மித்து, செயற்கை கடற்கரைக்குள் செல்லும் நுழைவாயில் அமைந்துள்ளது.

இந்த கடற்கரைக்குள் செல்லும் வழியில் உணவு கடைத் தொகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைத் தொகுதிகளை கடந்தே, செயற்கை கடலுக்குச் செல்ல முடியும்.

கடலை நிரப்பி, அந்த கடலுக்கு நடுவில் கடற்கரை ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பாரிய கற்களைக் கொண்டு, கடலுக்கு நடுவில் மதில் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால், செயற்கை கடலில் பாரிய அலைகள் காணப்படவில்லை.

அது மாத்திரமன்றி, இந்த கடலில் விநோத படகு சேவைகளும் காணப்படுகின்றன. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த செயற்கை கடற்கரையைப் பார்வையிட்டு, மகிழ்வதற்கான சந்தர்ப்பத்தை நிர்வாகத்தினர் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, இந்த கடற்கரையைப் பார்வையிடுவதற்காகப் பெருந்திரளான மக்கள் தொடர்ச்சியாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். நிகழ்வுகளை செய்யும் வகையிலான படகு சேவைகளும் இந்த இடத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பிரசித்தி பெற்ற உணவகங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன், விருந்து உபசாரங்களையும் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இங்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செயற்கை கடல் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது?

கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக நகர் திட்டத்தை அண்மித்த கடலில், புதிதாக கடற்கரையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கையாக மணல் நிரப்பப்பட்டு, இந்த கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் மணல் நிரப்பப்பட்டு, புதிதாக ஒரு நிலப் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிலப்பரப்பில் கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழமற்ற கடல் பகுதியில் மணல் நிரப்பப்பட்டு, புதியதாக ஒரு நிலப்பரப்பை உருவாக்கி, அதில் கடற்கரையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில் சீற்றம் குறைவான அலைகளே கரைக்கு வருகின்றன.

ஆழ்கடல் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கற்கள் நிரப்பப்பட்டு, அலையின் சீற்றம் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், செயற்கை கடற்கரையில் அலையின் சீற்றம் குறைவாகவே காணப்படுகிறது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தப் பகுதியில் ஆழம் குறைவாகவும் அலையின் சீற்றம் குறைவாகவும் இருக்கும் என்பதால் மக்கள் அச்சமின்றி நீராட முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: