ராதிகா மெர்ச்சண்ட்: அம்பானி வீட்டு மருமகளாகும் இவர் யார்? பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, முகேஷ் அம்பானியின் மருமகளாகும் ராதிகா மெர்ச்சண்ட் யார்?
ராதிகா மெர்ச்சண்ட்: அம்பானி வீட்டு மருமகளாகும் இவர் யார்? பின்னணி என்ன?

இந்தியாவின் பெரும் பணக்காரரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மருமகளாகிறார் ராதிகா மெர்ச்சண்ட். முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்குமான திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்றது.

3 நாள் விழாவில் பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரிஹானா, இவான்கா டிரம்ப் என வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் திரைத்துறை நட்சத்திரங்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த் அம்பானி, "ராதிகாவைப் பார்த்ததும் என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். ஆனாலும், நேற்று சந்தித்தது போல உணர்கிறேன். ராதிகாவைச் சந்தித்தது 100 சதவீதம் என் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்." என்றார்.

முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளில் ஆனந்த் அம்பானிதான் இளையவர். விரைவில் அவரை கரம்பிடிப்பதன் மூலம் ராதிகா இந்தியாவின் பணக்கார குடும்பத்தின் மருமகளாக மாற இருக்கிறார்.

ராதிகா மெர்ச்சண்ட்

பட மூலாதாரம், ANI

ராதிகா மெர்ச்சண்ட் - பின்னணி என்ன?

ராதிகா இந்திய மருந்தக நிறுவனமான என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விரேன் மெர்ச்சண்டின் மகள்.

மும்பை கதீட்ரல் பள்ளி, பின்னர் ஜான் கோனன் பள்ளி, அதன் பிறகு எக்கோலோ மாடர்ன் வேர்ல்ட் ஆகிய பள்ளிகளில் பயின்றார். இதைத் தொடர்ந்து, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

இது தவிர இஸ்ப்ரவா நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாகவும் பணிபுரிந்தார்.

ராதிகா என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்,

இது தவிர, இந்திய பாரம்பரிய நடனமான பரத நாட்டியத்திலும் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.

டிசம்பர் 2022 இல், தனது நடன அரங்கேற்றத்தின்போதுதான் செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் கவனம் பெறத் தொடங்கினார் ராதிகா. பல ஆண்டுகளாக பாரம்பரிய நடனப் பயிற்சிக்குப் பிறகு இந்த அரங்கேற்றம் நடந்தது.

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டபோது, பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ராதிகாவின் லிங்க்டு-இன் (LinkedIn) சுயவிவரத்தின்படி, வணிகம் தவிர, அவர் குடிமை உரிமைகள், பொருளாதார அதிகாரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிளும ஆர்வம் கொண்டவர் என தெரிகிறது.

ஆனந்த் அம்பானியும் ராதிகாவும் கல்லூரிப் பருவத்திலேயே சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனந்த் அம்பானியின் கூற்றுப்படி, ராதிகா ஏழு ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

அம்பானியின் மகளான இஷா அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அம்பானி குடும்பத்துடன் ராதிகா காணப்பட்டார்.

டிசம்பர் 2022 இல், ஆனந்த் மற்றும் ராதிகா இருவரும் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ராதிகா மெர்ச்சண்ட்

பட மூலாதாரம், ANI

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)