4-ஆவது ஆண்டாக பனி சிகரங்களில் நேருக்கு நேர் சந்திக்கப் போகும் இந்திய- சீன ராணுவம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தொடர்ந்து நான்காவது ஆண்டாக, குளிர்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவின் ராணுவங்கள் இருநாடுகளுக்கும் இடையேயான மெய்யான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன.
2020-ல் இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய எல்லைப் பிரச்னை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. எல்லையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பும் இதுவரை 20 சுற்று ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி சில பகுதிகளில் பின்வாங்கியுள்ளன.
இரு நாடுகளின் துருப்புகளும் பின்வாங்கிய பகுதிகளில் கல்வான், பாங்காங் சோவின் வடக்கு மற்றும் தெற்குக் கரை, கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள ரோந்துப் புள்ளி 17 மற்றும் ரோந்துப் புள்ளி 15 ஆகியவை அடங்கும். இந்த இடங்களில் ராணுவமயமாக்கப்பட்ட 'தடுப்பு மண்டலங்கள்' உருவாக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 2021-ல் பாங்காங் சோவில் இருந்து விலகுவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. அதேபோல், ஆகஸ்ட் 2021-ல் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள ரோந்துப் பகுதி 17இல் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கின. ஆனால் பல சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பிறகும் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகள் குறித்து தீர்வு காண முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
20-ஆவது சுற்று பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை
இந்திய-சீனா கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான 20ஆவது சுற்று கூட்டம் அக்டோபர் 9 மற்றும் 10 தேதிகளில் இந்திய எல்லையில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகம், “இரு நாடுகளின் தேசியத் தலைமையின் வழிகாட்டுதலின்படி மற்றும் 2023 ஆகஸ்ட் 13-14 அன்று நடைபெற்ற கார்ப்ஸ் கமாண்டர்கள் கூட்டத்தின் கடைசிச் சுற்றில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில், இருவரும் மேற்குத் துறையில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் படைகளை குறைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டது” என்று தெரிவித்தது.
மேலும், “மீதமுள்ள சிக்கல்களை முன்கூட்டியே மற்றும் பரஸ்பரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்காக அவர்கள் நேர்மையான, திறந்த மற்றும் ஆக்கபூர்வமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சம்பந்தப்பட்ட ராணுவ மற்றும் ராஜதந்திர வழிகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் மற்றும் பேச்சுவார்த்தைகளின் வேகத்தைத் தக்கவைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இடைப்பட்ட காலத்தில் எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர் ”என்றும் கூறியிருந்தது.
இந்த அறிக்கையிலிருந்து, கிழக்கு லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவி வரும் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவருவதில் எல்லைப் பேச்சுவார்த்தைகள் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டுவரவில்லை என்பது தெளிவாகிறது.
டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லைப் பதற்றம் தீர்க்கப்படாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், ALKA ACHARYA
‘தேர்தல் ஆண்டில் தீர்வை எட்டுவது கடினமானது’
டாக்டர். அல்கா ஆச்சார்யா, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சர்வதேச ஆய்வுப் பள்ளியின் கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தில் பேராசிரியராக உள்ளார்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான மோதல் எந்த திசையில் செல்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக அவரிடம் பிபிசி பேசியது.
“இரு நாடுகளுக்கும் இடையே உருவாகும் சூழல் நீண்ட காலம் நீடிக்கும் என்பது வெளிப்படையானது. இந்தியா தனது எல்லை என்று அழைக்கும் இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பது தெளிவாகிறது. 2020 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த விவகாரம் சாதாரண சண்டை அல்ல. சீன வீரர்கள் உள்ளே வந்து, சண்டையிட்டு, திரும்பிச் சென்றனர். உண்மையில் இது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களை, ஆக்கிரமிப்பது குறித்தது. எனவே, இந்த விவகாரத்தில் விரைவாக தீர்வு எட்டப்படாது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தீர்வு நிச்சயம் எட்டப்பட வேண்டும். ஆனால், அதற்கு நேரம் எடுக்கும்.” என்று அல்கா ஆச்சார்யா கூறினார்.
அரசியல் காரணங்களுக்காக இந்த பிரச்சனை எதிர்வரும் காலங்களில் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடும் என்றும் அவர் கருதுகிறார்.
“இந்தியாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் சூழலில் இதுபோன்ற விஷயங்களில் சமரசம் செய்வதோ அல்லது தோல்வியை ஏற்றுக்கொள்ளவோ இயலாது என்பது போன்ற உள்நாட்டு காரணிகள் ஆளும் கட்சிக்கு நெருக்கடியாக இருக்கும்.”

பட மூலாதாரம், SB ASTHAN
‘எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் சொந்த கருத்துகள் உள்ளன’
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. எல்லையின் அளவு 3,488 கிலோமீட்டர் என்று இந்தியா கூறுகிறது, ஆனால் சுமார் 2,000 கிலோமீட்டர்தான் என்று சீனா கூறுகிறது. எல்லை தொடர்பாக இரு நாடுகளின் பார்வையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டது.
இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்பி அஸ்தானா, பாதுகாப்பு மற்றும் வியூக விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.
எல்லைகள் மற்றும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றைப் பொறுத்தவரை, இரு தரப்பினரும் தங்கள் சொந்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், “இந்தியா மற்றும் சீனாவைப் பொருத்தவரை, அவர்கள் பேசும்போது, இரு தரப்பும் எதையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை மாறாக எல்லாவற்றையும் எடுக்க விரும்புகின்றன. வேறுவார்த்தையில் கூறவேண்டுமென்றால், நான் எதையெல்லாம் உரிமைக்கோருகிறேனோ அவை எனக்கானது. நீங்கள் சமரசம் செய்து கொள்ளுங்கள் என்ற ரீதியிலானது” என்று குறிப்பிட்டார்.
அஸ்தானாவின் கூற்றுப்படி, இதுபோன்ற சூழ்நிலைகளில் கொடுக்கல் வாங்கல் அல்லது பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை. “இரு நாடுகளுக்கும் இடையே எந்தப் பரிவர்த்தனையும் இல்லாததால் அதைத் தீர்க்க முடியாமல் திணறுகிறார்கள். அதனால் பிறகு பேசுவோம் என்று சொல்லியே பெரும்பாலான பேச்சு வார்த்தை முடிவடைகிறது” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
‘எல்லை பிரச்னையின் வேர்கள் நீண்ட வரலாறு கொண்டவை’
மேஜர் ஜெனரல் அஸ்தானா, பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையில் எல்லை ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், ஆனால் சுதந்திர இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அத்தகைய ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை என்றும் கூறுகிறார்.
“இந்த ஒப்பந்தத்தின்படி, ஜான்சன் கோடு லடாக்கை ஒட்டிய எல்லைக் கோடு என்று இந்தியா கூறுகிறது. அதேசமயம், கிழக்குப் பகுதியில், பிரிட்டிஷ் இந்தியா திபெத்துடன் மெக்மஹோன் எல்லைகோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு, அதில் எதுவும் இல்லை. இந்த இரண்டு ஆவணங்களும் இருப்பதால் இந்தியாவின் நிலைப்பாட்டில் தவறில்லை. சீனாவைப் பொறுத்த வரையில், சுதந்திர இந்தியாவுடன் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்கிறார்கள். மக்மஹோன் கோடு இறுதி செய்யப்படும் போது, அவர் அதை ஏற்கவில்லை என்றும் சீனா கூறுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
லடாக்கைப் பற்றி பேசுகையில், சீனா 1960-ன் உரிமை கோரலைப் பற்றி பேசுகிறது என்றும், இந்த உரிமைகோரல் கோடு இரு நாடுகளின் எல்லை என்றும், மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு அல்ல என்றும் அஸ்தானா கூறுகிறார்.
“இரு தரப்பும் ஒருவரது நிலைப்பாட்டில் மற்றொருவர் உடன்படாததால், இரு தரப்பும் இருக்கும் இடத்திலேயே நிற்கின்றன. சீனாவின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அது முன்னேறிச் சென்று தன்னிடம் இதற்கு முன் இல்லாத அந்த எல்லையை ஆக்கிரமித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவைப் பொறுத்தவரை, ஜான்சன் கோட்டை எல்லையாக கருதுகிறது, எனவே சீனா நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை மீறியுள்ளது, தற்போதைய நிலையை மாற்றியுள்ளது என்று இந்தியா கூறுகிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு சீனா திரும்ப வேண்டும் என்று இந்தியா கூறுவதாக அஸ்தானா கூறுகிறார்.
மேலும், “இந்தியா தற்போதைய நிலைக்காக பேச்சுவார்த்தை நடத்துகிறது, ஆனால், சீனாவோ, அது அதன் எல்லையை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது, இப்போது அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாது என்று கருதுகிறது. இங்குதான் இரு நாடுகளும் சிக்கித் தவிக்கின்றன, இதனால்தான் முட்டுக்கட்டை தொடர்கிறது”என்றார்.
எவ்வாறு முன்னெடுத்து செல்வது?
சீனா தனது ராணுவத்தை குவிப்பதை தொடரும் வரை, இந்தியாவுக்கும் ராணுவத்தை குவிப்பதை தவிர வேறு வழியில்லை என்று மேஜர் ஜெனரல் அஸ்தானா கூறுகிறார்.
“டெப்சாங் மற்றும் டெம்சோக்கின் விலகலில் இருந்து ஒருவித தீர்வு வெளிப்பட்டு, சீன தரப்பிலிருந்து ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்டால் இந்தியாவும் படைகளை விலக்கிக்கொள்ளும்.”
“தற்போது உள்ளது போல் தொடர்ந்து எல்லைகளை ஆக்கிரமிக்க வேண்டும் என சீனா முடிவெடுத்தால், இந்தியாவும் தற்போதுள்ளதுபோல் எல்லைகளை ஆக்கிரமிக்க வேண்டும். இது நிரந்தரமான சூழ்நிலையை உருவாக்கி, எல்லை பகுதிகளில் இந்தியா தொடர்ந்து இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உள்கட்டமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வையும் நீக்க அது முயற்சிக்கும்” என்று அஸ்தானா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
‘ஆபத்து அதிகரிக்கும்போது படை குவிப்பிற்கான தேவையும் அதிகரிக்கும்’
கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே போட்டி நடந்து வருகிறது. 2020-ம் ஆண்டு தொடங்கிய சமீபத்திய எல்லைப் பிரச்சனைக்குப் பிறகு, எல்லைக்கு அருகில் பல பகுதிகளில் சீனா விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் வான் பாதுகாப்பு தளங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், பல புதிய கிராமங்களையும் நிறுவுகிறது என்று அவ்வப்போது செய்திகளில் கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் எல்லைக்கு அருகில் உள்ள தனது பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.
சமீபத்தில், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் சிலர் கூறியதாக மேற்கோள் காட்டி, இந்த குளிர்காலத்தில் கிழக்கு லடாக்கில் இருந்து துருப்புக்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்றும் சமீபத்திய கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு செய்ய முடியும் என்று கூறியது. அவற்றை பயன்படுத்தி எல்லையில் வலுவான ஆதிக்கம் நிலைநாட்டப்படும். தேவைப்பட்டால் ரோந்து பணி மட்டுப்படுத்தப்படும் என்றும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
அச்சுறுத்தலின் அடிப்படையில் இந்தியா படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வேறு எதன் அடிப்படையிலும் இல்லை என்றும் மேஜர் ஜெனரல் அஸ்தானா கூறுகிறார்.
“எத்தனை துருப்புகள் அனுப்பப்பட வேண்டும் என்பதை அச்சுறுத்தல்தான் முடிவு செய்கிறது. இந்தியா தொழில்நுட்பம், கண்காணிப்பு திறன் மற்றும் நவீனமயமாக்கலை மேம்படுத்த வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் இஸ்ரேலில் சமீபத்தில் பார்த்தது போல் உங்களிடம் மிக உயர்ந்த "தொழில்நுட்ப கண்காணிப்பு சுவர் இருக்கலாம், ஆனால் சரியான முறையில் படைகளை அனுப்பவில்லை என்றால் அதனால் எந்த பயனும் இல்லை என ஹமாஸ் நிரூபித்துள்ளது”என்று இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
தொழில்நுட்பம் உங்கள் வலிமையை அதிகரிக்கிறது. உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்ய அவை உங்களுக்கு உதவுகின்றன, ஆனால் ஒரு பகுதியில் எவ்வளவு வீரர்கள் தேவைப்படுகின்றனர் என்பது ஆபத்து கடுமையானதா, குறைவானதா என்பதை பொறுத்தது.
மதிப்பீடுகளின்படி, சீனாவுடனான மோதல் காரணமாக, கிழக்கு லடாக்கில் சுமார் 50 ஆயிரம் வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது. இதேபோன்ற எண்ணிக்கையிலான துருப்புக்கள் சீன தரப்பிலும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோதியின் கருத்தால் சீனாவுக்கு லாபமா?
ஜூன் 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் இறந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோதி, முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்தார் . அதன் பிறகு பேசிய அவர்,“நமது எல்லையை யாரும் கடக்கவும் இல்லை, ஊடுருவவும் இல்லை, நமது எந்த தடுப்பும் யார் வசமும் இல்லை” என்று கூறினார்.
எல்லை தகராறு குறித்த பேச்சுவார்த்தையின் போது சீனா இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக மூலோபாய விவகார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், AFP
“இதனால்தான் சீன தீர்க்கமாக செயல்படுவதாக நான் சந்தேகிக்கிறேன். பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததற்கு இதுவே காரணம்” என்று ஆச்சார்யா கூறுகிறார்.
அப்படியென்றால், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றுவதில் சீனா வெற்றி பெற்றதா?
“தற்போது நிலைமை ஓரளவுக்கு சீனாவுக்கு சாதகமாகவே தெரிகிறது” என்கிறார் ஆச்சார்யா.
இதற்கு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில இடங்களை சீனா கைப்பற்றிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது.
“மறுபுறம், இந்தியா சில இடங்களை காலி செய்துவிட்டது, அவை இப்போது இடையக மண்டலங்களாக மாறியுள்ளன. எனவே, சில இடங்களில் இந்தியா திரும்பிச் சென்றது, மேலும் இந்திய வீரர்கள் முன்பு நிறுத்தப்பட்ட இடங்கள் தற்போது ஒரு வகையான ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக மாறியுள்ளன.”
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












