இந்தியா நோக்கி வந்த கப்பலை டிரோன் மூலம் தாக்கியதா இரான்? அமெரிக்கா என்ன செய்தது?
இந்தியாவுக்கு ரசாயனம் ஏற்றிக் கொண்டு வந்த கெம் ப்ளூட்டோ (CHEM PLUTO) கப்பல் சௌதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. லைபீரிய நாட்டுக்கொடியுடன் அந்த கப்பல் அரபிக்கடலில் பயணத்தை தொடர்ந்தது. குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரையில் இருந்து 200 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் வந்துகொண்டிருந்தபோது அதன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கெம் ப்ளூட்டோ கப்பல் மீது இரானில் இருந்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. கப்பலின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாகவும், இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. சரக்கு கப்பல் மீது இரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா முதன் முறையாக நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த கப்பல் மட்டுமல்லாது, எம்.வி. சாய்பாபா (MV SAIBABA) என்ற சரக்கு கப்பல் மீதும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க கடற்படை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டிசம்பர் 23 ஆம் தேதி ஏமன் நேரப்படி, மதியம் 3 மணி முதல் 8 மணி வரை செங்கடல் பகுதியில் ரோந்து சென்றதாகவும், அப்போது, ஏமனில் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து நான்கு ஆளில்லா ட்ரோன்கள் நுழைந்ததாகவும், அதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், 8 மணிக்குப் பிறகு இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதில் நார்வேக்கு சொந்தமான கப்பல் தாக்குதலில் இருந்து தப்பியது. இந்தியக் கொடியுடன் கூடிய எம்.வி. சாய்பாபா கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது எனினும் யாருக்கும் காயங்களோ சேதங்களோ பதிவாகவில்லை என்றும் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
அதுகுறித்து இரான் கூறியது என்ன? நடுக்கடலில் என்ன நடந்தது? அங்கே இந்திய கடற்படை என்ன செய்கிறது? அவர்களது விளக்கம் என்ன?
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



