"திருமதி இலங்கை" பட்டம் பறிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் கிரீடம் சூடிய புஷ்பிகா டி சில்வா

பட மூலாதாரம், PUSHPIKA DE SILVA FACEBOOK PAGE
திருமதி இலங்கை அழகி போட்டியின்போது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி. சில்வாவின் மகுடம் பறிக்கப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை, இன்று உலக அளவில் எதிரொலித்தது. இந்த நிலையில், பறிக்கப்பட்ட மகுடம், மீண்டும் புஷ்பிகா டி. சில்வாவுக்கு இன்று வழங்கப்பட்டது.
முன்னதாக, கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, "திருமதி இலங்கை அழகி" ஆக தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், உலக அழகி போட்டியில் கிரீடத்தை சுவீகரித்த கரோலின் ஜுரி, புஷ்பிகா டி. சில்வா, திருமதி இலங்கை கிரீடத்தை பெற தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.
இதையடுத்து, புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட, கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார். இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாக பேசுப் பொருளாக மாறியுள்ளது.
போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என அறிவித்தே, புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், கரோலின் ஜுரியின் செயலுக்கு எதிராக, புஷ்பிகா டி சில்வா, கொழும்பு - கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பட மூலாதாரம், PUSHPIKA DE SILVA FACEBOOK PAGE
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, 2020ம் ஆண்டு திருமதி உலக அழகியாக தெரியாகியுள்ள கரோலின் ஜுரியின் செயற்பாடு, கவலையை அளிப்பதாக உலக திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையொன்றின் ஊடாகவே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், இலங்கை பிரபலங்கள் இந்த சம்பவம் தொடர்பில் என்ன கூறுகின்றார்கள் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க, ஊடகங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
உலக திருமதி அழகுராணியொருவர், மேடையில் செயற்பட்ட விதம் தொடர்பில் தான் கவலை அடைவதாக ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.
உலக நிபந்தனைகளுக்கு அமையவே, செயற்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
நடுவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கரோலின் ஜுரிக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.
அழகு ராணி போட்டிகளில் தான் கண்ட மிகவும் மோசமான சம்பவம் இதுவென உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.
கண்ணீருடன் புஷ்பிகா நடத்திய ஊடக சந்திப்பு

இதற்கிடையே, "திருமதி இலங்கை கிரீடம் புஷ்பிகா டி சில்வாவிற்கு, மீண்டும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய புஷ்பிகா, தனது கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டவர்கள் மீது தனக்கு எந்தவித கோபமும் கிடையாது என தெரிவித்தார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மீது வைராக்கியம் வைக்க போவதில்லை எனவும், நீதி என்றாவது ஒரு நாள் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உலகில் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுக்காக தான் குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக சாதனைகளை படைக்கும் இந்த தருணத்தில், அழகி போட்டிகளில் மாத்திரம் ஏன் அவர்கள் பங்களிப்பை வழங்கக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விடயம் தொடர்பில் தான் எதிர்வரும் காலங்களில் செயற்பட்டு, விவாகரத்து பெற்ற பெண்களும் இந்த அழகி போட்டியில் பங்கேற்கும் சூழலை ஏற்படுத்த முயற்சிப்பேன் என்று புஷ்பிகா டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதனூடாக தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண்ணொருவரை வீழ்த்துவதற்காக, யாராவது ஒருவர் முயற்சிகளை மேற்கொள்வாராயின், அது அவருக்கான வெற்றி கிடையாது எனவும் கூறும் அவர், அதுவே அவரின் தோல்வி எனவும் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையில் தவறி பல இடங்கள் உள்ளதாகவும், அவ்வாறு தான் வீழ்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது பெற்றோரே தனக்கு ஒத்துழைப்பாக இருந்ததாகவும் கூறி, கண்ணீர் விட்டு அழுதார் புஷ்பிகா.
இதேபோல, தனது சகோதரிகள் உள்ளிட்ட அருகிலிருந்த பலரும் தனக்கு துணையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தன்னுடன் யார் இல்லாவிட்டாலும், தனது குழந்தைக்காக தனது வாழ்க்கையை தான் முன்னோக்கி கொண்டு செல்வதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தனது வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் புஷ்பிகா டி சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.
அழகு கலை நிபுணர்களின் கருத்து

பட மூலாதாரம், NAYANA KARUNARATHNA
பிரபல அழகு கலை நிபுணர் நயனா கருணாரத்னவிடம் பிபிசி தமிழ் வினவியது.
இந்த சம்பவமானது, மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என பிரபல அழகு கலை நிபுணர் நயனா கருணாரத்ன தெரிவிக்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் போட்டியாளர்கள் தகுதியானவர்களா இல்லையா என்பதை முதலிலேயே அடையாளம் கண்டுக்கொண்டிருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.
கிரீடத்தை சுவீகரித்ததன் பின்னர் உலக போட்டிகளிலும்; சில தவறுகள் ஏற்படுவது வழமையானது என கூறும் அவர், அந்த தவறுகளை திருத்திக் கொள்ளும் நடைமுறையொன்று காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
கீரிடத்தை அணிவித்ததன் பின்னர், தவறு இழைக்கப்பட்டுள்ளது என உறுதியாகும் பட்சத்தில், தனிப்பட்ட ரீதியில் அழைத்து தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறுகின்றார்.
அதைவிடுத்து, இவ்வாறு நடந்துக்கொள்வது, மிகவும் மோசமான விடயம் என பிரபல அழகு கலை நிபுணர் நயனா கருணாரத்ன தெரிவிக்கின்றார்.
பிரபல அழகு கலை நிபுணரும், அழகு கலை நிபுணர்கள் சங்கமான சலாஅப் சங்கத்தின் தலைவருமான கயல்விழி ஜெயபிரகாஷிடமும், பிபிசி தமிழ் வினவியது.

பட மூலாதாரம், KAYALVILI JAYAPRAGASH
கிரீடம் அணிவிக்கப்பட்டதன் பின்னர், அந்த கிரீடத்தை அதேமேடையில் வைத்து மீளப் பெற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று என கயல்விழி ஜெயபிரகாஷ் தெரிவிக்கின்றார்.
புஷ்பிகா டி சில்வா, தகுதியற்றவர் என்றால், அவரை போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்கு பல சந்தர்ப்பங்கள் காணப்பட்ட போதிலும், வெற்றியீட்டியதன் பின்னர், இவ்வாறு நடந்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கூறுகின்றார்.
உலக அழகு ராணியாக தெரிவான ஒருவர் இவ்வாறு நடந்துக்கொண்டிருக்கக்கூடாது என கயல்விழி ஜெயபிரகாஷ் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் பிரபல நடிகை நிரஷ்ஜனி சண்முகராஜாவின் பதில்
உலக அழகியான தெரியான ஒருவர், மேடை நாகரீகம் தெரியாது நடந்துக்கொண்டுள்ளதாக நிரஷ்ஜனி சண்முகராஜா தெரிவிக்கின்றார்.
கிரீடத்தை சூடுவதற்கு முன்னரேனும், இந்த அறிவிப்பை அறிவித்திருந்தால், அது ஏற்றுக்கொண்டிருக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

பட மூலாதாரம், NIRANJANI SANMUGARAJA
எனினும், கிரீடத்தை சூடியதன் பின்னர், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டமையானது, மிகவும் மோசமான செயற்பாடு என அவர் கூறுகின்றார்.
அழகி என்பது உருவத்தை அடிப்படையாக வைத்து மதிப்பிட முடியாது என கூறும் அவர், ஒருவரின் மனம் மற்றும் சக மனிதனை எவ்வாறு பார்க்கின்றோம் என்பதிலேயே உண்மையாக அழகு இருக்கின்றது என அவர் தெரிவிக்கின்றார்.
விவாகரத்து பெற்ற ஒருவர், எதற்கும் தகுதியில்லை என்ற கோணத்தில், மேடையில் பகிரங்கமாக அறிவிப்பதானது, பெண்மைக்கு செய்யும் அநீதி என அவர் கூறுகின்றார்.
திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெருமளவிலான பெண்களையே, அவமானப்படுத்தியது போன்றே தான் இந்த சம்பவத்தை உணர்வதாக அவர் தெரிவிக்கின்றார்.
உலக அழகி என கிரீடம் சூடிய ஒருவர், உலகிற்கே உதாரணமாக நடந்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
ஒரு பெண்ணுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஒருவரே, அழகி என்ற இடத்திற்கு தகுதியானவர் என கூறும் அவர், கிரீடத்தை சூடிக்கொண்டிருக்கும் பெண்ணொருவரே, மற்றுமொரு பெண்ணை அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறுகின்றார்.
திரைப்பட தயாரிப்பாளரும், பிரபல சிங்கள திரைப்பட நடிகையுமான ரேணுகா பாலசூரியவிடமும், பிபிசி தமிழ் வினவியது.

திருமதி அழகியொருவரை நடுவர் குழுவொன்று தெரிவு செய்திருந்த நிலையில், அதனை நிராகரித்து, மற்றுமொருவரை அறிவிக்கும் அதிகாரம் எவ்வாறு அவருக்கு கிடைத்தது என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
இது காலத்தை வீணடிக்கும் ஒரு செயற்பாடு என தான் கருதுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கிரீடத்தை சுவீகரித்ததன் பின்னர், அதனை பறிப்பது எவ்வாறு என தன்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என திரைப்பட தயாரிப்பாளரும், பிரபல சிங்கள திரைப்பட நடிகையுமான ரேணுகா பாலசூரிய தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












