இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஓய்வுபெற்ற இரண்டே மாதத்தில் அரசியலில் நுழையும் முன்னாள் ராணுவ தளபதி

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க களமிறங்கியுள்ளார்.
தேசிய மக்கள் இயக்கம் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மகேஷ் சேனாநாயக்க களமிறங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை இலங்கை ராணுவத்தின் 22ஆவது தளபதியாக ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கடமையாற்றியிருந்தார்.
நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு துறைசார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இயக்கமாக தேசிய மக்கள் இயக்கம் அமைந்துள்ளது.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதி ஆய்வாளர் அஜித் கொலன்னே ஆகியோரின் தலைமையில் இந்த இயக்கம் உருவாகியுள்ளது.
சட்டவாதிக்கத்தை உறுதிப்படுத்தல், வீண் விரயம், ஊழல் ஆகியவற்றை இல்லாதொழித்தல் மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
நாட்டில் காணப்படுகின்ற சம்பிரதாய அரசியல் நடைமுறையை முழுமையாக இல்லாது செய்யும் வகையிலேயே மகேஷ் சேனாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதாக தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர்கள் கூறுகின்றனர்.
''இந்த இடத்தில் அரசியல் கிடையாது. இந்த இடத்தில் சுயாதீனமாக நாட்டை மாற்றும் நோக்குடன் ஒன்றிணைந்தோரே இருக்கின்றனர். இது எனது தீர்மானம் கிடையாது. இது அனைவரது தீர்மானமாகும்" என ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கூறியிருந்தார்.
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னர், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த மகேஷ் சேனாநாயக்க முன்னெடுத்த நடவடிக்கைகளின் ஊடாக அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஒருவராக மாற்றம் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2010ஆம் ஆண்டு அவரை ராணுவத்திலிருந்து விலக்கியிருந்ததுடன், புதிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து மகேஷ் சேனாநாயக்க மீண்டும் ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பிரபல தொழிலதிபரான ரொஹான் பல்லேவத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












