காணாமல் போன தமிழர்களை ராஜபக்ஷதான் திருப்பித்தர முடியும்: உறவினர்கள்
இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி வரும் 20ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளதாக கூறும் அந்த அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் லீலாதேவி ஆனந்தராஜா, உள்நாட்டில் தமது உறவுகளை மீட்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ராஜபக்ஷ அவர்களின் கையிலேயே இருப்பதாக கூறுகிறார்.
''தற்போதைய ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை''
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது காணாமல் போன எவரும் தமது படையினரின் தடுப்பில் இல்லை என்று இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவரை தாம் மூன்று தடவைகள் சந்தித்து பேசியும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்று கூறும் லீலாதேவி, அவரிடத்தில் தாம் நம்பிக்கை இழந்துபோயிருப்பதாக கூறுகிறார்.
ஆகவே மஹிந்த ஆட்சியில் அவர்கள் காணாமல் போன நிலையில் அவரால் மாத்திரமே அவர்களை மீட்டுத்தரமுடியும் என்ற ஒரு சிறிய நம்பிக்கை கீற்று தமக்கு தெரிவதாக அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய தேர்தலில் பலம் பெற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, தனது கடந்தகாலத் தவறுகளை திருத்திக்கொள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தர உதவ வேண்டும் என்று லீலாதேவி கூறுகிறார்.
இதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளுக்கு தாங்கள் இணங்குவதாக எவரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று கூறும் லீலாவதி, தமது உறவுகளை மீட்க தாம் எவ்வளவு கீழேயும் இறங்கிச் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
''பிடித்துச் செல்லப்பட்டதற்கு ஆதாரம் உண்டு''
காணாமல்போன தனது மகன் அனுராஜ் உட்பட தனது மாவட்டத்தில் காணாமல் போன 1,200 பேரில் சுமார் ஆயிரம் பேர் படையினரால், கைது செய்யப்பட்டமை, அவர்களிடம் கையளிக்கப்பட்டமை, அல்லது சரணடைந்தமைக்கான ஆதாரம் இருப்பதாக லீலாதேவி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
காணாமல் போன எவரும் இலங்கை அரசாங்க படையினரின் தடுப்பில் இல்லை என்று அரசாங்க தரப்பில் கூறப்படுவதை ஏற்பதற்கு காணாமல் போனவர்களின் உறவுகள் தயாராக இல்லை.
போர்க்குற்றம் தம்மீது வந்துவிடும் என்பதற்காக அவர்களை இராணுவமும் அரசியல்வாதிகளும் மறைத்து வைத்திருப்பதாக லீலாதேவி குற்றஞ்சாட்டுகிறார்.
எந்த கட்சியை சேர்ந்தவர்களாயினும் அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷ மீது தடுத்து வைத்தல் குறித்த போர்க்குற்றச்சாட்டு விழுவதை விரும்பவில்லை என்றும், அதனாலேயே எல்லோரும் சேர்ந்து அதனை மறைப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஆகவே தற்போதைக்கு உள்நாட்டில் இருக்கக்கூடிய ஒரே வழி ராஜபக்ஷவே அவர்களை மனந்திருந்தி விடுவிப்பதே என்று அவர் குறிப்பிடுகிறார்.
சர்வதேசம் உதவ வேண்டும்
அப்படி இல்லாத ஒரு சூழ்நிலையில் சர்வதேச சமூகம் தமக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்கிறார். ஆனால், சர்வதேச சமூகம் இந்த விசயத்தில் தலையிடுவதில் ஒரு பிரச்சினை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதாவது சர்வதேச சமூகம் இந்த விசயத்தில் நேரடியாகத் தலையிட்டால், தமது குற்றங்களை மறைக்க இலங்கை அரசாங்கம், தமது உறவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முனையலாம் என்று அவர் கவலைப்படுகிறார்.
சர்வதேச சமூகம் இந்த விசயத்தில் அக்கறை செலுத்துவதற்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












