You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நிலச்சரிவு: நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அனர்த்தங்களில் சிக்கியுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற இலங்கை அரசின் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற இலங்கை விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டரொன்று பத்தேகம என்னுமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்ற இந்த விபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லை என விமான் படை பேச்சாளரான கிஹான் செனவிரட்ன தெரிவித்திருக்கின்றார்.
எற்கனவே காலி மாவட்டத்திலுள்ள நெலுவ பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப் படை வீரரொருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய கட்டுரைகள்:
மரணங்கள் 164, காணாமல் போனோர் 104
அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் இன்று திங்கட்கிழமை காலை வெளியிட்டுள்ள தகவலில் 7 மாவட்டங்களில் பெண்கள் , குழந்தைகள் உட்பட 164 மரணங்களும் 104 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பதிவிடப்பட்டுள்ளது. காயமுற்றோர் எண்ணிக்கை 88 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்பட்ட தகவலில் 151 மரணங்களும் 111 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டிருந்தன.
களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மேலும் 13 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்தே இந்த 161 ஆக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.
இரத்தினபுரி - 71 பேர் , களுத்துறை -53 பேர் , மாத்தறை -21 பேர் , காலி -09 பேர் , அம்பாந்தோட்டை - 05 பேர் , கம்பகா - 03 பேர் , கேகாலை - 02 பேர் என மாவட்ட வாரியாக 164 மரணங்கள் அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தில் பதிவாகியுள்ளது.
களுத்துறை -58 பேர் , இரத்தினபுரி - 20 பேர் மாத்தறை 14 பேர் ,காலி - 10 பேர் , கேகாலை -02 பேர் என மாவட்டரீதியாக காணாமல் போயுள்ளதாக பிந்திய தகவலில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் 1இலட்சத்து 28 ஆயிரத்து 586 குடும்பங்களை சேர்ந்த 4இலட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 412 வீடுகள் முழுமையாகவும் 4266 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ள.
பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 18 ஆயிரத்து 652 குடும்ப உறுப்பினர்களான 75 ஆயிரத்து 236 பேர் 336 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி கூறுகின்றார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்