டென்னிஸ் மோசடிகள்:சுயாதீன மறுஆய்வுக் குழு அமைப்பு
டென்னிஸ் விளையாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான தமது செயல்பாடுகள் எப்படியுள்ளன என்பது குறித்து சுயாதீன மறுஆய்வு செய்யவுள்ளதாக உலக டென்னிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AP
போட்டிகளில் பந்தய நிர்ணய மோசடிகள் நடைபெற்றன என்பதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சுயாதீன மறுஆய்வுக்கான இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது.
மெல்பர்ண் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போதே இந்த அறிவிப்பு வெளியானது.

பட மூலாதாரம், Reuters
உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் ஐம்பது இடங்களில் இருக்கும் பதினாறு வீரர்கள் மீது சந்தேகங்கள் உள்ளன என்று பிபிசியும் பஸ்ஃபீட் இணையதளமும் கூட்டாக வெளியிட்ட புலனாய்வு அறிக்கையை அடுத்து இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அவர்கள் பந்தய நிர்ணய மோசடிகளில் ஈடுபட்டனர் என ஊழல் தடுப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பிறகும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அந்த புலனாய்வு தெரிவித்தது.
உலகளவில் பந்தய மோசடியை ஒரு தனித்துவமான குற்றச்செயலாக அறிவிக்க அரசுகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் டென்னிஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.








