உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு - மலிங்கா கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் மே மாதம் 30-ஆம் தேதியன்று துவங்கவுள்ளது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இன்று உலககோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது. இதில் அதிர்ச்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் இலங்கை தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்த தொடரில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் பதவி லசித் மலிங்காவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியை திமுத் கருணரத்னே வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரோஷன் டிக்வெல்லா, தனுஷா குணாதிலகா, தினேஷ் சந்திமால், உபுல் தரங்கா, அகிலா தனஞ்செயா என முக்கியமான வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 2017-க்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத மிலிண்டா சிறிவர்தனா, ஜெஃபிரி வாண்டர்சே ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

கடந்த 2015 உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு பிறகு எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டியிலும் விளையாடாத ஜீவன் மெண்டீசுக்கும் தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான இலங்கை அணி விவரம் - 15 பேர் கொண்ட பட்டியல்

திமுத் கருணரத்னே (கே), அவிஸ்கா ஃபெர்னாண்டோ, லஹிரு திரிமன்னே, குஷால் பெரேரா, குஷால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, ஜெஃப்ரி வாண்டர்சே, திசரா பெரேரா, இசுரு உடானா, லசித் மலிங்கா, சுரங்கா லக்மால், நுவான் பிரதீப், ஜீவன் மெண்டிஸ், மிலிண்டா சிறிவர்தனா

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் இந்த உலக கோப்பையில் பங்கேற்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :