ஒமிக்ரான் உண்மையில் ஒரு இயற்கையான தடுப்பு மருந்தா? உண்மை என்ன?

    • எழுதியவர், மயங்க் பகாவத்
    • பதவி, பிபிசி மராத்தி

கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் லேசானதாகத் தோன்றுகிறது. அந்த பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது.எனவே, வேகமாக பரவக்கூடிய தொற்றாக இருந்தாலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஓமிக்ரான் திரிபு ஒரு 'இயற்கையான தடுப்பு மருந்து' என சில நிபுணர்கள் நம்புகின்றனர்.இருப்பினும், இந்த கோட்பாட்டை மகாராஷ்டிரா கொரோனா தடுப்பு செயல் நடவடிக்கை குழு உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி மறுக்கிறார். அவர், "இது ஒரு தவறான கருத்து. ஒமிக்ரான் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது," என்கிறார்.அது சரி.... ஓமிக்ரானை ஏன் 'இயற்கை தடுப்பு மருந்து' என்று சிலர் அழைக்கிறார்கள்? இந்தக் கூற்றில் உண்மை உள்ளதா? நிபுணர்களின் உதவியுடன் இதை ஆய்வு செய்ய முயற்சித்தோம்.

ஓமிக்ரான் ஏன் 'இயற்கை தடுப்பூசி' என்று அழைக்கப்படுகிறது?

இயற்கையான தடுப்பு மருந்து என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.மிகவும் பலவீனமான நுண்ணுயிரிகள் அல்லது வைரஸ்கள் எந்தவொரு நோய்க்கும் எதிராக எதிர்ப்பு மருந்தாக உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. சில தடுப்பு மருந்துகளில் இறந்த வைரஸும் பயன்படுத்தப்படுகிறது.

மகாராஷ்டிராவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் பிரதீப் அவதே, சிலர் ஓமிக்ரானை 'இயற்கை தடுப்பு மருந்து' என்று ஏன் அழைக்கிறார்கள் என்பதைப் பற்றிய மூன்று முக்கிய விஷயங்களை சுருக்கமாகக் கூறுகிறார்.

  • ஓமிக்ரான் கடுமையான நோயை ஏற்படுத்தாது. இருப்பினும், அதன் பரவும் திறன் மிகவும் தீவிரமானது.
  • அதனால் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்படும், ஆனால் நோய் தீவிரமாக இருக்காது.
  • அது ஒவ்வொருவரின் உடலை சென்றடைந்ததும் ஆன்டிபாடிகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

"இந்த காரணங்களுக்காக, சில நிபுணர்கள் ஒமிக்ரானை 'இயற்கையான தடுப்பூசி' என்று நம்புகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கான மூன்றாவது அலைக்கு ஓமிக்ரான் திரிபு முக்கிய காரணமாகும். ஓமிக்ரான் கிட்டத்தட்ட மரணம் விளைவிக்கும் டெல்டாவுக்கு மாற்றாகி வருகிறது.

டாக்டர் கெளதம் பன்சாலி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பாளராகவும், பம்பாய் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவராகவும் உள்ளார். அவரிடம், ஓமிக்ரான் ஒரு 'இயற்கை தடுப்பூசியா' என்பதை அறிய முற்பட்டோம்."ஓமிக்ரான் உண்மையில் கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு 'இயற்கை தடுப்பு மருந்து'. அந்த வைரஸால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நபர்களின் விகிதம் குறைவாக உள்ளது. நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை அல்லது மிகக் குறைவு," என்கிறார் அவர்.தற்போதைய சூழ்நிலையில் ஓமிக்ரான் அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையில்லை என்றும், வென்டிலேட்டர் தேவையில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.டாக்டர் கெளதம் பன்சாலி மேலும் கூறுகையில், "டெல்டா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்த அலையில் பிரதிபலிக்கவில்லை. நோயாளிகளுக்கு இந்தியாவில் மருந்து தேவையில்லை. எனவே, கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், எங்களால் அதை இயற்கையான தடுப்பு மருந்து என கூற முடியும்," என்கிறார்.

ஓமிக்ரானை 'இயற்கை தடுப்பூசி' என்று அழைப்பது தவறா?

மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் திரிபின் அலை வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் புதியது. இது டெல்டாவை விட லேசானது என்பதால், அதைப் புறக்கணிப்பது புத்திசாலித்தனமாக இருக்காது என்பது நிபுணர்கள் சிலரது கருத்து.மகாராஷ்டிரா கொரோனா செயல் நடவடிக்கை குழுவின் உறுப்பினர் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, "ஓமிக்ரானை 'இயற்கை தடுப்பூசி' என்று அழைப்பது தவறு. ஒவ்வொரு தொற்றுக்கும் பக்க விளைவுகள் உண்டு."ஓமிக்ரான் பாதிப்புடைய நோயாளிகள் நீண்ட கால கோவிட் நோயால் பாதிக்கப்படலாம். அதன் விளைவுகள் இன்னும் அறியப்படவில்லை. ஓமிக்ரானை ஒரு 'இயற்கை தடுப்பூசி' என்று கூறுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை," என்பது அவரது வாதம்.

இந்தியவில் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாரடைப்பால் இறந்தார். அந்த வகையில் ஒமிக்ரானை 'இயற்கை தடுப்பூசி' என்று சிலர் அழைப்பது ஒரு 'ஆபத்தான' யோசனை என்று மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் பலருக்கு இணை நோய்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு, இதய நோய் மற்றும் பிற பிரச்னைகள் அவர்களுக்கு உள்ளன. இப்படிப்பட்ட நோயாளிகள் தவறுதலாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாவது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் கிரிதர் பாபு ட்விட்டர் பக்கத்தில், "இதுபோன்ற தவறான தகவல்களிலிருந்து விலகி இருங்கள். ஓமிக்ரான் லேசானதாக இருந்தாலும் கூட, அது மரணத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அதனால் மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை உள்ளது," என்று கூறியுள்ளார்.அவர் மேலும், "தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இயற்கையான தொற்றுகள் மரணம் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் சேருவதை தடுக்காது," என குறிப்பிட்டுள்ளார்.

ஓமிக்ரான் தொற்று காரணமாக மரணம் ஏற்படாது என்று கூறுவது தவறு என்று ஐஜிஐபி இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்."ஒமிக்ரான் ஒவ்வொரு நபருக்கும் குறைவான ஆபத்தை ஏற்படுத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இது மிகவும் ஆபத்தானது. அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள், அதிகமான நோயாளிகள் இறப்பார்கள். இது இயற்கையால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி அல்ல," என்று அவர் கூறுகிறார்.

ஓமிக்ரானுடன் கோவிட் முடிவுக்கு வருமா?

ஒமிக்ரான் திரிபு டெல்டாவுக்கு மாற்றாக பரவி வருகிறது. இது பாதிப்பு அளவில் லேசானதாக தோன்றுகிறது. எனவே, நோய் பரவினாலும் உயிரிழப்பு ஏற்படாது என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.டாக்டர் கெளதம் பன்சாலி, "டெல்டாவிற்குப் பதிலாக ஓமிக்ரான் வந்தால், அது தொற்றுநோய் கட்டுப்பாட்டின் கீழ் வர வாய்ப்புள்ளது," என்று கூறுகிறார்."கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது. எனவே, இனி மக்கள் முககவசம் அணிந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்," என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: