You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவும் உடல்நலமும்: காய்கள், பழங்கள், தானியங்கள் என பல வண்ண உணவுகள் உடலுக்கு எப்படி உதவும்? - ஹெல்த் டிப்ஸ்
- எழுதியவர், ஜெசிகா ப்ரவுன்
- பதவி, பிபிசி ஃப்யூச்சர்
இன்று நாம் என்ன உண்ணப்போகிறோம் என்ற கேள்வி பலரின் முன்னும் வந்துபோகும் ஒன்று.
அதை அந்த நேரத்தில் கிடைக்கும் காய்கறியை கொண்டோ, நமக்கு இருக்கும் நேரத்தைக் கொண்டோ நாம் முடிவு செய்து கொள்வோம். ஆனால் நான் உண்ணும் உணவு சத்தானதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
நமது உணவு பலதரப்பட்டதாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அதற்கு ஒரு வழி, அதிக வண்ணங்கள் நிறைந்த உணவை உண்பது. ஆனால் அவ்வாறு பல வண்ணங்களால் ஆன உணவை உண்டால் மட்டும் நாம் ஊட்டச்சத்து மிக்க உணவை உண்கிறோம் என்று அர்த்தமா?
ஆரோக்கியமான மெடிட்டரேனியன் டயட்
அதற்கு ஓர் ஆதாரம் மெடிட்டரேனியன் டயட் (மத்திய தரைக்கடல் உணவுமுறை). இந்த உணவுமுறையில் பலவகையான பழங்கள், காய்கறிகள் மற்றும் உடல்நலத்துக்கு உகந்த கொழுப்புகள் இருக்கும்.
இந்த உணவுமுறையை அறிவியலாளர்கள் உடல்நலத்துக்கு உகந்த உணவுமுறை என்று கருதுகிறார்கள்.
இந்த உணவுமுறையில் பலவகையான பழங்கள், காய்கறிகள் இருப்பதாலேயே அது பல வண்ணங்கள் கொண்ட்தாகவும் உள்ளது.
பாரம்பரியமான மத்திய தரைக்கடல் உணவுமுறையை உண்பது நீங்கள் நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் பைடோநியூட்ரியன்ட்ஸை (pytonutrients) எடுத்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த பைடோநியூட்ரியன்ட்ஸ் உடலில் உள்ள தேவையற்ற கழிவை நீக்க உதவும்.
அதேபோன்று இந்த உணவுமுறையை ஆரோக்கியமானது என்று சொல்வதற்கு மற்றொரு காரணம், இந்த உணவுமுறையில் காய்கறிகளை எண்ணையில் வதக்காமல், வேக வைப்பார்கள் அது காய்கறியில் உள்ள ஊட்டச்சத்தை பாதுகாக்கிறது.
ஏன் அதிக வண்ணங்கள் கொண்ட உணவை உண்ண வேண்டும்?
அதிக வண்ணங்கள் கொண்ட உணவை உண்பது மூலம் உங்களுக்கு பலவிதமான ஊட்டச்சத்துகள் கிடைக்கலாம்.
அதிக பழம் மற்றும் காய்கறிகள் கொண்ட உணவை உண்பதால் நமது மூளை மற்றும் இதயத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ளன என்கிறார் அமெரிக்க மாகாணமான ஓரிகனில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் வெஸ்டன் ஸ்டேட்ஸின் ஊட்டச்சத்து நிபுணர் டென்னா மினிச்.
ஒவ்வொரு நிறத்தினால் ஆன தாவரங்களில் ஒவ்வொரு நன்மைகள் உள்ளன.
"சில தாவரங்களின் நிறமிகள் உடலில் சில பகுதிகளுக்கு சென்று அங்கேயே தங்கிவிடும் என்கிறார் முனிச். எடுத்துக்காட்டாக மஞ்சள் மற்றும் பச்சை நிற உணவுகளில் காணப்படும் லுடீன் கண்ணின் பின்புறத்தில் இருக்கும் மாக்குலா என்ற பகுதியில் தங்கிவிடும். அது பார்வை இழப்பை தடுக்கும்."
அதேபோன்று ஃபளாவோனாய்ட் என்ற பைடோநியூட்ரியண்ட் மூளை நலமுடன் இருக்க உதவுகிறது.
அல்சைமர் நோயுடன் தொடர்புடைய நியூரோடாக்சிசிட்டியை தடுக்க உதவுகிறது.
50 ஆயிரம் பேரின் உணவு பழக்கத்தை 20 வருடத்திற்கும் மேல் ஆராய்ந்தார் ஹாவார்ட் டிஎச் சான் பொது சுகாதார பள்ளியின் தொற்றுநோயியல் ஆராய்ச்சியாளர் டியான் ஷின் யே.
அவரின் ஆராய்ச்சியின் மூலம் அதிக ஃபளாவோனாய்ட் உணவை எடுத்து கொள்பவர்களுக்கு டிமென்சியா ஆபத்தும், அறிவாற்றல் குறையும் ஆபத்தும் குறைவு என்கிறார். இந்த ஃபளாவோனாய்ட் ஆரஞ்சு, மிளகு, திராட்சை ஆகியவற்றில் அதிகம் உள்ளது.
ஆனால் தொடர்ந்து 20 வருடங்கள் இம்மாதிரியான உணவை எடுத்து கொள்பவர்களுக்குதான் அதிக பயன் என்றும் தெரியவந்துள்ளது.
அதேபோன்று அதிக நிறங்கள் கொண்ட உணவை உண்பது ஒரே உணவை உண்ணும் ஆபத்தையும் குறைக்கும்.
"அதே சமயம் உணவு என்பது புரிந்து கொள்ள சற்று கடினமானதாக இருக்கும். ஆரஞ்சு பழச்சாறு அறிவாற்றல் குறையும் ஆபத்தை குறைக்கும் ஆனால் அதே சமயம் அதிகமாக எடுத்தால் அது டைப் 2 நீரிழிவுக்கு வழிவகுக்கும்," என்கிறார் யே. இது அதிகப்படியான சர்க்கரை உடலில் சேர்வதால் நேர்கிறது.
வெறும் பழம் மற்றும் காய்கறிகள் அல்ல
அதிக நிறங்கள் கொண்ட உணவை உண்பது என்றால் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் உண்பதில்லை. விதைகள், கொட்டை வகை, மூலிகை தாவரம், சிறுதானியங்கள் ஆகியவையும் அடங்கும். அதேபோன்று வெள்ளை நிற உணவும் அதில் அடங்கும் என்கிறார் முனிச்.
அதற்கு எடுத்துக்காட்டாக டோஃபுவை சொல்கிறார். அதில் ஏகப்பட்ட ஐசோஃப்ளாவோன்ஸ் (isoflavones) உள்ளது. இது இதய நோய், சில வகையான புற்றுநோய் மற்றும் அறிவாற்றல் குறைவு ஆகிய பாதிப்பை குறைக்கிறது.
இம்மாதிரியான அதிக நிறங்கள் கொண்ட உணவை உண்ண மக்களை வலியுறுத்தினால் அவர்கள் அதிக சத்தான உணவை உண்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
ஆனால் அதிக நிறங்கள் கொண்ட உணவை உண்பது ஆரோக்கியமற்ற உணவை உண்ணும் ஆபத்தையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
பிசாவில் அதிக நிறங்கள் காணப்பட்டால் அதை நாம் அதிகம் உண்போம். அதேபோன்று அதிக நிறங்கள் என்று சொல்லும்போது செயற்கையான நிறங்கள் ஏற்றப்பட்ட உணவுகளை நாம் தவிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
நிறத்தில் கவனம் செலுத்துவதை போல நாம் சுவையில் கவனம் செலுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கசப்பு உணவுகளை 12 வாரங்களுக்கு எடுத்து கொண்டவர்களை ஆராய்ந்ததில் ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை அளவு குறைந்தது தெரியவந்தது. இதற்கு அதில் உள்ள சார்ச்சத்து மற்றும் பைடோநியூட்ரியண்ட்ஸ் காரணம்.
அதேபோன்று வேர் காய்கறிகள், முட்டைகோஸ் போன்ற ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் உள்ள உணவை எடுத்து கொள்வதும் பயனளிக்கும் என்கிறது ஆய்வு. இந்த ஆன்டி ஆக்சிடெண்ட்கள் உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.
அதேபோன்று ஒரு தாவரத்தின் எந்த பகுதியை நாம் உண்கிறோம் என்பதும் முக்கியம் என்கிறார் யே.
இது பிபிசி ஃப்யூச்சரில் வெளியான கட்டுரை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்