ரெம்டெசிவிர் மருந்து உயிரைக் காக்குமா? கொரோனா வைரஸ் சிகிச்சையில் இதன் பங்கு என்ன?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மருந்தை அரசு விற்பனை செய்து வந்தாலும் இந்த மருந்தை வாங்க பெரும் போட்டி நிலவுகிறது. உண்மையில் இந்த மருந்து எந்த அளவுக்கு நோயைக் குணப்படுத்துவதில் உதவுகிறது?
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆரம்ப நிலை நோயாளிகளுக்கு பலனளிப்பதாகக் கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசே ஏப்ரல் மாத இறுதியில் இதன் விற்பனையைச் சென்னையில் துவங்கியது. முதலில் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் மட்டும் விற்கப்பட்டுவந்த இந்த மருந்து தற்போது சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விற்கப்படுகிறது.
இந்த மருந்து மிகக் குறைந்த அளவே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் குறைந்த அளவே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒவ்வொரு நாளும் இந்த மருந்தைப் பெறுவதற்கான கூட்டம் அதிகரித்து வருகிறது. பலர் இந்த மருந்தைப் பெறுவதற்காக இரவு - பகல் பாராமல் வரிசையில் நின்று வருகின்றனர்.
இதன்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, நேரு விளையாட்டரங்கில் 4 கவுண்ட்டர்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி இன்று முதல் அங்கு விற்பனை துவங்கியது.
ஆனால், இங்கு தினமும் 300 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கென முன்கூட்டியே டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. இருந்தபோதும் விற்பனை துவங்கிய முதல் நாளான இன்று பெரும் எண்ணிக்கையில் நோயாளிகளின் உறவினர்கள் இந்த மருந்தை வாங்கத் திரண்டனர்.
கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதுவரை தெளிவான பதில்கள் இல்லை. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு நவம்பரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் இந்த மருந்தால் இறப்பு குறைவதோ, வென்டிலேட்டரின் அவசியம் குறைவதோ இல்லை என ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாகக் கூறியது. விரைவில் உடல்நலம் தேறுவதில்கூட இந்த மருந்துக்கு பங்கில்லை என்றும் தெரிவித்தது.
தொற்றுக்கான பல்வேறு மருந்துகளைப் பரிசோதிக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி கோவிட் Solidarity trial என்ற சோதனையை உலக சுகாதார அமைப்பு துவங்கியது. இதில் ரெம்டெசிவிர், லோபினவிர், ஹைட்ராக்ஸிக்ளோரோக்யின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் சோதிக்கப்பட்டன.
இந்த மருந்துகளை அளிப்பதால் இறப்பு குறைகிறதா, மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் குறைகிறதா, கோவிட் தாக்கி நிமோனியா வந்தவர்களுக்கு வென்டிலேட்டர் பொருத்தும் நிலையை தடுக்கிறதா என்பதை அறிய இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயினால் இறப்பு அதிகரிப்பதாகக் கருதப்பட்டு சோதனையிலிருந்து நீக்கப்பட்டது. பிறகு மறுபடியும் சேர்க்கப்பட்டது. முடிவில் அந்த மருந்தால் எந்த பலனும் இல்லையெனத் தீர்மானிக்கப்பட்டது. 2020 அக்டோபரில் தாக்கல்செய்யப்பட்ட Solidarity Trialன் இடைக்கால சோதனை அறிக்கையில் இந்த மூன்று மருந்துகளாலும் பெரிதாக எந்தப் பலனும் இல்லை எனக் கூறப்பட்டது.
இருந்தபோதும், இந்த மருந்து தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு சமீபத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்து மற்றும் சிகிச்சைக்கான நெறிமுறைகளை வெளியிட்டபோது, அதில் இந்த மருந்து இடம்பெறவில்லை. இருந்தபோதும், இந்த மருந்திற்கான தட்டுப்பாடு குறையவில்லை.
"உலகம் முழுவதும் ரெம்டெசிவிர் கொரோனாவுக்குப் பலனளிக்கிறதா என்பது குறித்து செய்யப்பட்ட சோதனைகளில் சாதகமான முடிவுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த மருந்தைக் கொடுப்பதால் இறப்பு குறையவில்லை. குணமடையும் விகிதம் மாறவில்லை. ஆகவே, அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்து கொடுக்கப்படுவதில்லை. ஆனால், தனியார் மருத்துமனைகள் இப்போதும் இந்த மருந்தை பரிந்துரைக்கின்றன." என்கிறார் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறை பேராசிரியர் பரந்தாமன்.

ஆரம்ப கட்டத்தில் இந்த மருந்தைக் கொடுத்தால், மிகச் சிறிய அளவில் பலன் இருக்கும். மருத்துவமனையில் இருக்கும் நாட்களை இது குறைக்கும். ஆனால், தீவிர நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை கொடுப்பதாலோ, கொடுக்காமல் இருப்பதாலோ எவ்வித மாற்றமும் இருக்காது என்கிறார் அவர்.
"அதாவது ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில், பத்து நாட்களுக்குள் இந்த மருந்தைக் கொடுத்தால் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நாட்கள் சிறிது குறையும். ஆனால், நோயின் ஆரம்ப நிலையிலோ, தீவிர நிலையிலோ இந்த மருந்தைக் கொடுத்தால் எந்த பலனும் இருக்காது. இது உயிர் காக்கும் மருந்து அல்ல" என்கிறார் பரந்தாமன்.
இந்தக் கருத்தையே எதிரொலிக்கிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குனர் குழந்தைச்சாமி. "கொரோனா தொற்றைப் பொறுத்தவரை, உயிர் காக்கும் மருந்துகள் என்றால் ஸ்டீராய்டுகளும் லோ மாலிக்யுலர் ஹோப்பரின் மருந்துகளும்தான். ரெம்டிசிவரைப் பொறுத்தவரை, அது உயிர் காக்கும் மருந்து அல்ல" என்கிறார் குழந்தைச்சாமி.
இந்த மருந்து தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டும் மிகக் குறைந்த அளவில் கிடைப்பதால்தான் இதற்கு இவ்வளவு பெரிய தேவை இருக்கிறது. இந்தத் தருணத்தில் இந்த மருந்தால் பலனில்லை என்று சொன்னால் மக்கள் ஏற்க மாட்டார்கள். மருந்துக்குத் தட்டுப்பாடு இருப்பதால் இப்படிச் சொல்வதாக நினைப்பார்கள் என்கிறார் குழந்தைச்சாமி.
தவிர, இந்த மருந்துக்கு தீவிரமான பக்க விளைவுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் பரந்தாமன். இந்த மருந்தால் சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய துடிப்பு குறைவது ஆகியவையும் ஏற்படலாம். "ஏற்கனவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதயத் துடிப்பும் குறையுமானால், அவர் அபாயநிலையை அடையலாம்" என்கிறார் பரந்தாமன்.

பட மூலாதாரம், Getty Images
இந்த மருந்துக்கு நிலவும் தட்டுப்பாட்டைக் குறைக்க குழந்தைச்சாமி ஒரு ஆலோசனையை முன்வைக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஒன்று காப்பீடு சார்ந்த ஒப்புதல்களுக்காக இயங்கிவருகிறது. ஒரு மருத்துவமனை ஒரு நோயாளிக்கு இந்த மருந்தைப் பரிந்துரைத்தால், இந்த கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்து, நோயாளியின் விவரங்களைத் தர வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்களை வைத்து, அந்த நோயாளிக்கு உண்மையிலேயே ரெம்டெசிவிர் தேவையா என்பதை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அந்த ஒப்புதல் பெற்றவர்களுக்கு மட்டுமே மருந்தை அந்தந்த மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக கிட்டங்கியில் விற்க வேண்டும். இதன் மூலம் தேவையில்லாதவர்கள் இந்த மருந்தை வாங்குவது தடுக்கப்படும்; தனியார் மருத்துவமனைகளும் தேவையில்லாமல் இந்த மருந்தைப் பரிந்துரைப்பது தடுக்கப்படும் என்கிறார் குழந்தைச்சாமி.
பெரிய பலனில்லாத, பக்கவிளைவுகள் நிறைந்த இந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது என அரசு சொல்ல முடியாதா? "சொல்ல முடியாது. மிதமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிறிதளவு பலனளிக்கும் நிலையில், அந்த மருந்து கொடுப்பதை ஏன் தடைசெய்கிறீர்கள் என்று கேட்பார்கள். ஆகவே சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்தான் இதைப் பரிந்துரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார் டாக்டர் பரந்தாமன்.
ரெம்டெசிவிர் மருந்து துவக்கத்தில் ஹெப்படிட்டிஸ்-சி வைரஸ் தாக்குதலை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு எபோலா வைரஸ் தாக்கியபோது இந்த மருந்து அளிக்கப்பட்டது. பிறகு கோவிட் - 19 நோய் தாக்குதல் பெருந்தொற்றாக உருவெடுத்ததையடுத்து, இந்த மருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












