You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: "கோவிட் - 19 வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகளவில் பரவுகிறது"- புதிய ஆய்வு
கொரோனா வைரஸ் தொற்று வெளிநபர்களிலிருந்து பரவுவதைவிட வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகம் பரவுவதாக தென் கொரிய தொற்று நோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வில் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு சொல்வது என்ன?
கொரோனா தொற்று உள்ளான முதன்மை நோயாளிகள் 5,706 பேரும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 59 ஆயிரம் பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இதில் நூற்றில் இரண்டு பேருக்கு மட்டுமே வெளியாட்களிடம் இருந்து கோவிட்- 19 பரவியது தெரியவந்துள்ளது, பத்தில் ஒருவருக்கு வீட்டில் உள்ள நபர்களிடமிருந்தே கொரோனா பரவி இருக்கிறது.
வயதின்படி பார்த்தால், வீட்டில் பதின்மவயது அல்லது 60 மற்றும் 70 வயதுடையவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களிடமிருந்தே வீட்டில் இருக்கும் பிறருக்கு கொரோனா அதிகளவில் பரவி இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
இதற்குக் காரணம் இந்த வயதுடையவர்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை இவர்கள் அதிகம் சார்ந்து இருக்கிறார்கள் என்கிறார் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஜாங் என் கியாங். இவர் இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றியவர்.
குழந்தைகளின் நிலை
ஒன்பது வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் இந்த தொற்றுக்கு முதன்மை நோயாளிகளாக இருப்பது மிகவும் குறைவு என்கிறார் மருத்துவர் சோ யங் ஜூன் .
இந்த ஆய்வில் பங்காற்றிய சோ யங் ஜுன் ஹாலிம் மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
பெரியவர்களுடன் ஒப்பிடும்போது கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கோவிட்- 19 நோய்க்குக் குழந்தைகளே அதிகமாக உள்ளாகின்றனர். இதன் காரணமாக அவர்களில் முதன்மை நோயாளிகளைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது.
இந்த ஆய்வுக்கான தரவுகள் ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை தென் கொரியாவில் சேகரிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் தென் கொரியாவில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டது.
தென் கொரியாவில் இப்போது ( புதன்கிழமை மாலை) வரை 13,879 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 297 பேர் பலியாகி உள்ளனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :