கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா? உண்மை என்ன?

Coronavirus

பட மூலாதாரம், Jerry Redfern / getty images

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து பல வதந்திகள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று தேநீர் குடிப்பது குறித்த செய்தி.

சமூக வலைதளத்தில் தேநீர் குடிக்கும் கப் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கும் என செய்தி பரவி வருகிறது. இவ்வாறு கூறியது கொரோனா பற்றி இந்த உலகிற்கு முதன்முதலில் எச்சரித்த சீன மருத்துவர் லீ வென்லியாங் என கூறுகின்றனர்.

அவர் கொரோனா வைரஸ் பற்றி எச்சரிக்கை விடுத்து சீன நாட்டினருக்கு ஒரு நாயகனாக இருந்தவர். பின்னர் அவரும் கொரோனா தாக்கி இறந்துவிட்டார்.

அவர் தன்னுடைய குறிப்பில் தேநீரில் இருக்கும் மெத்தில்சாந்த்தைன் என்னும் வேதிப் பொருள் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார் என செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

இதனால் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீன மருத்துவமனையில் இரண்டு வேலை தேநீர் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

மெத்தில்சாந்த்தைன் (Methylxanthines) தேநீர், காஃபி மற்றும் சாக்லேட் ஆகியவற்றில் கலக்கப்படுகிறது என பிபிசி தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது. ஆனால் மருத்துவர் வென்லியாங் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லை.

அவர் ஒரு கண் மருத்துவர். வைரஸ் நிபுணர் இல்லை. சீனாவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக மருத்துவமனையில் தேநீர் கொடுக்கப்படவில்லை பிப்ரவரியில் வெளியான சில சீன செய்திகளில் தேநீர் கொரோனாவை குணப்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அவற்றுக்கு எந்த ஆதாரமும் குறிப்பிடப்படவில்லை.

எனவே தேநீர் அருந்துவது கொரோனா உண்டாக்கும் கோவிட்-19 தொற்றில் இருந்து மீள உதவும் என்பது ஆதாரபூர்வமான செய்தியல்ல என்பது தெளிவாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: