கௌதம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரரானார் - இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக முதலாளி

பட மூலாதாரம், Getty Images
உலகிலேயே இரண்டாவது பெரிய பணக்காரராக கௌதம் அதானி மாறியுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.
அமேசானின் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகிய உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார்.
உலக பணக்காரர்களின் பட்டியலில் 273.5 பில்லியன் டாலர் மதிப்புடன் ஈலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
கடந்த மாதம் அர்னால்ட்-யை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பெற்றிருந்த கௌதம் அதானி, ஜெஃப் பசோஸ்-க்கு அடுத்த இடத்தில் இருந்தார்.
இப்போது மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் அர்னால்ட், 153.5 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார். மேலும், 149.7 பில்லியன் டாலர் மதிப்போடு ஜெஃப் பெசோஸ் நான்காவது இடத்திலுள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் விமிடெட் தலைவரான முகேஷ் அம்பானி, 92 பில்லியன் டாலர் மதிப்போடு உலக பணக்காரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்சத்தில் துவங்கின.
அதன் படி, போர்ஃபஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் 154.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

யார் இந்த கௌதம் அதானி

பட மூலாதாரம், Getty Images
- 1980களிலேயே கல்லூரிப் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, சொந்த ஊரான அகமதாபாத்தை விட்டு மும்பைக்குச் சென்று வைர வியாபாரத்தில் இறங்கினார்.
- 1988ஆம் ஆண்டு தன் சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க மீண்டும் குஜராத் வந்து, தனக்கென சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கி தன் தொழிலதிபர் கனவுக் கோட்டைக்கு அடித்தளமிட்டார் அதானி. அந்த நிறுவனத்தின் பெயர் தான் அதானி என்டர்பிரைசஸ்.
- அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை தொடங்கிய கெளதம், அதன் பிறகு தன் வாழ்கையில் எதற்காகவும், யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. 1994-ல் இந்திய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைஸ் நிறுவனத்தை பட்டியலிட்டார்.
- 1995-ல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை வென்றார். 2000-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை செய்யத் தொடங்கினார். 2001-ல் சமையல் எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
- அதன் பிறகு மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர்... என கிடைத்த வியாபாரங்களில் எல்லாம் கால் பதித்தார்.
- அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும், ஆறு நிறுவனங்களை மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டிருக்கிறது. முதன் முதலில் பட்டியலிட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை கடந்த 1994-ல் 150 ரூபாயாக இருந்தது, கடந்த மார்ச் 2020 நிலவரப்படி 75,000 ரூபாயாக இருக்கிறது என அதானி குழுமம் தன் 2019 - 20 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
- அதே போல 2008ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலின் போது, அவ்விடுதியில் சிக்கி இருந்த பல விருந்தினர்களில் கெளதம் அதானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளதம் அதானியின் வியாபாரத்தின் தனிச்சிறப்புகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பலவீனமான கட்டமைப்பை நம்பி தொழில் செய்ய விரும்பாத அதானி, தனக்கென தனியே ரயில்வே லைன்களை அமைத்துக் கொண்டார். தனி மின் நிலையங்களையும் அமைத்துக் கொண்டார்.
இந்தியாவிலேயே சுமார் 300 கிலோமீட்டர் நீளத்துக்கு தனியார் ரயில் பாதைகளைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் அதானிதான் என அவர்களின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ரயில் பாதைகள், தங்களின் துறைமுகம், சுரங்கங்கள் மற்றும் வியாபார சந்திப்புகளுக்கு இடையில் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்க உதவுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதே போல இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் அனல் மின் நிலையம் வைத்திருக்கும் நிறுவனமும் அதானி குழுமம்தான். குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர் என பல மாநிலங்களில் இந்நிறுவனம் 12,450 மெகா வாட் மின்சாரம் தயாரிப்பதற்கான திறனைக் கொண்டுள்ளதாக அதானி பவர் நிறுவனம் தன் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
அனல் மின் நிலையத்தை வைத்திருந்தால் மட்டும் போதுமா? அதற்கான எரிபொருள் வேண்டுமல்லவா... அதற்காக இந்தோனீசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கங்களை நடத்தி வருகிறார் அதானி.
ஹென்றி ஃபோர்ட் எப்படி பிரேசிலில் ரப்பர் தோட்டத்தை வாங்கி தன் கார்களுக்குத் தேவையான ரப்பர் தேவையை பூர்த்தி செய்து கொண்டாரோ, அப்படி ஒரு ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியை கெளதம் அதானி உருவாக்கிக் கொண்டார் என ஒரு செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.
கெளதம் அதானியின் வியாபாரத் தடம்

பட மூலாதாரம், Getty Images
முந்த்ராவுக்குப் பிறகு அதானி, இந்தியாவில் மேலும் ஆறு துறைமுகங்களை வாங்கினார் அல்லது கட்டமைத்தார். அது அவரை இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக முதலாளியாக்கி இருக்கிறது.
"இந்தியாவில் கையாளப்படும் ஒட்டுமொத்த சரக்கில் சுமார் 25 சதவீதத்தை அதானி குழும நிறுவனங்கள் கவனித்துக் கொள்வதாகவும், இந்த அளவு வருங்காலத்தில் அதிகரிக்கலாம்" எனவும் ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருக்கும் ஏ கே பிரபாகர் கூறுகிறார்.
மேலும் உலக அளவில் சரக்கை அதிவேகமாக கையாளும் உயர்மட்ட நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ் நிறுவனமும் ஒன்று என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
சில தசாப்தங்களுக்கு முன் தொடங்கிய அதானியின் அனல் மின்சார நிலையங்கள், தற்போது இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
மின்சாரம் என வந்த பிறகு சூரிய ஆற்றலையும் அதானி விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலேயே அதிக அளவில் சோலார் மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்களில், அதானி க்ரீன் நிறுவனம்தான் நம்பர் 1 என தன் பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியில் தான், 2500 ஏக்கர் நில பரப்பில், உலகின் மிகப் பெரிய சோலார் உற்பத்தி நிலையத்தை அமைத்திருக்கிறார் கெளதம் அதானி.
இந்தியாவில் பாக்கெட் எண்ணெய் வியாபாரத்தில் அதானியின் வில்மர் ஒட்டுமொத்த சந்தையில் 20 சதவீதத்தை தன் கையில் வைத்திருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை ஒரு செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது.
அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஜூன் 11ஆம் தேதி நிலவரப்படி சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில், ஆறில் ஐந்து நிறுவனங்கள் இந்தியாவின் டாப் 30 நிறுவனங்களில் இடம்பிடித்திருக்கின்றன என்றால் இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.
வியாபாரத்திலும் தொழிலிலும் இவ்வளவு உயரத்தை எட்டிய கெளதம் அதானி கூச்ச சுபாவமுடையவர். ஆங்கிலத்தில் அதிக புலமை இல்லை. தன் சக போட்டியாளர்களைப் போல அதிகம் ஊடகத்தின் முன் தோன்றி பகிரங்கமாகவோ, பெரிய ஆளுமையுடனோ பேசக்கூடியவர் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கின்ற போதிலும் தன் தொழில்சார் கூட்டங்களை முகேஷ் அம்பானியைப் போல பொது வெளியில் பகிரங்கமாக நடத்தி கவனத்தை ஈர்க்கக் கூடியவர் அல்ல. ஸ்டீவ் ஜாப்ஸைப் போல தன் சேவை குறித்தோ, தான் உற்பத்தி செய்யும் பொருள்கள் குறித்தோ மக்களிடம் நேரடியாக உரையாடக் கூடியவர் அல்ல. தான் சந்தித்தே ஆக வேண்டும் என்பவரை மட்டுமே சந்திப்பவர்.
டாடா, பிர்லா, அம்பானி போல கெளதம் அதானி பரம்பரை பணக்காரரா? இல்லை. ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க், செர்கி பிரைனின் கூகுள் போல புதிதாக பெரிதாக எதையாவது கண்டு பிடித்தாரா? இல்லை. நூற்றாண்டு காலமாக வியாபாரம் செய்கிறாரோ? அவர் வியாபாரம் செய்யத் தொடங்கியதே 1988-ல் தானே. பிறகு எப்படி இத்தனை குறுகிய காலகட்டத்தில் பெரிய பணக்காரரானார்?
வியாபார சர்ச்சைகள்
சீன கம்யூனிஸ்ட் தலைவர் டெங் சியாவோபிங் 1980-களில் சீனாவில் வணிகத்துக்கு சாதகமான 'சிறப்பு மண்டலங்கள்' என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் 2000ஆம் ஆண்டுகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் லாபகரமாக சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அதானியின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நன்றாக செயல்பட்டன. அதற்கு அதானியின் நல்ல நிர்வாகம் ஒரு காரணம் என்றாலும், அதானிக்கு நிலவும் சாதகமான சூழலே முக்கியக் காரணம் என சுட்டிக் காட்டினார் ராகுல் காந்தி.
குஜராத் மாநில அரசிடமிருந்து அதானி தனக்கு சாதகமான விலையில் நிலங்களை கைப்பற்றியதாக கூறினார் ராகுல் காந்தி.
அதானியை விமர்சித்த பத்திரிகையாளர்

பட மூலாதாரம், Getty Images
அதானியின் வளர்ச்சி, இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்களில் ஒருவரான பரன் ஜோய் குஹா தாகுர்தாவின் கவனத்தை ஈர்த்தது. 'கேஸ் வார்ஸ்: க்ரோனி கேப்பிட்டலிசம் அண்ட் தி அம்பானிஸ்' என்கிற புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இவர். முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி குறித்து நிறைய எழுதியிருக்கிறார்.
2016ஆம் ஆண்டு 'எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி' என்கிற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு, அதானியின் அசகாய வளர்ச்சி எப்படி சாத்தியமானது என தோண்டித் துருவி எழுதத் தொடங்கினார்.
அரசின் கொள்கைகள் அதானிக்கு சாதகமாக இருந்தது குறித்தும், அதானி குழுமத்தின் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் தொடர்ந்து எழுதினார். அதை எதிர்த்து அதானி குழுமம் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்தது. எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி பத்திரிகை, பரன் ஜோய் குஹாவின் கட்டுரையை வலைதளத்திலிருந்து நீக்கியது.
அது பரன் ஜோய் குஹா பதவி விலக வழி வகுத்தது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தலைமையில் பல்வேறு கல்வியாளர்களும் இச்சம்பவத்தை எதிர்த்து தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தன் வியாபாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் கெளதம் அதானி.
இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான சமத்துவமின்மை வரலாறு காணாத அளவுக்கு மிக அதிகமாக இருப்பதாக கூறுகிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி. அவ்வார்த்தைகள் உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அதானி அம்பானி போன்ற இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அதிகரிக்கின்றன. ஆனால் இந்திய சாமானியர்களுக்கோ எதிர்காலம் சூனியமாக இருக்கிறது.
அதானி தன் புதிய நிறுவனங்களை நிலைநிறுத்திக் கொள்வாரா? முகேஷ் அம்பானியை முந்தும் அளவுக்கு வருவாய், லாபம் எல்லாம் பார்ப்பாரா? இன்னும் என்ன மாதிரியான புதிய வியாபாரங்களில் எல்லாம் கால் பதிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













