You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாவர்க்கர் சிறையில் இருந்து பறவையின் இறக்கையில் அமர்ந்து பறந்தார் - கர்நாடக பாட புத்தகத்தில் சர்ச்சை தகவல்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பெங்களூரில் இருந்து, பிபிசி ஹிந்திக்காக
கன்னட பாட புத்தகத்தின் இடம்பெற்றுள்ள வீர சாவர்க்கர் தொடர்பான தகவல், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் அதில் உருவகப்படுத்தப்பட்டுள்ள சாவர்க்கரின் செயல் பரவலான கேலிக்கும் ஆளாகியிருக்கிறது.
எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் தான் சர்ச்சைக்குரிய தகவல் இடம்பெற்றுள்ளது. அதாவது, "சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்ட அறையில், ஒரு சிறிய சாவித் துவாரம் கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவைகள் எங்கிருந்தோ அறைக்கு வரும். சாவர்க்கர் ஒவ்வோர் நாளும் தாய்நாட்டிற்குச் செல்ல அந்த பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்," என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பத்தி சாவர்க்கரை மிகைப்படுத்தி விளக்குவதற்காக எழுதப்பட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் இது மாணவர்களுக்கு சற்றே குழப்பத்தை தரலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பாடப்புத்தகத்தின் நோக்கத்தை உணர்ந்த சிலர், இந்த வரிகள் தொடர்பான சர்ச்சையை நிராகரிக்கிறார்கள்.
'சாஹித்ய அலங்காரம்' என்ற அழகான உரைநடையின் சொல்லாடல் இது என்று அவர்கள் இந்த வரிகளை நியாயப்படுத்துகிறார்கள்.
புத்தகத்தில் உள்ள இந்த பாடத்தின் தலைப்பு களவன்னு கெடவரு 'Kalavannu Geddavaru'. இதற்கு அர்த்தம், 'நீரோட்டத்திற்கு எதிராக செல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்' என்பதாகும். இந்த உரை கே.டி. கட்டி எழுதிய பயணக் குறிப்பைக் கொண்டது. எழுத்தாளர் கே.டி.கட்டி, 1911 முதல் 1921 வரை வீர சாவர்க்கர் சிறையில் இருந்த அறைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு இப்படி எழுதியிருக்கிறார்.இந்த புத்தகத்தில் உள்ள பாடங்கள், கர்நாடகாவில் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவால் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
சாவர்க்கர் பற்றிய பாடநூல் சர்ச்சை என்ன?
சாவர்க்கரின் சிறை வாழ்க்கையை எழுதும்போது, சுவரைத் தாண்டி வானத்தை கூடப் பார்க்க முடியாத அளவுக்கு சிறிய ஓட்டை அந்த அறையில் இருந்ததாக ஆசிரியர் ஒரு பத்தியில் குறிப்பிடுகிறார்.
அந்த துவாரத்தின் வழியாக புல்புல் பறவைகள் எங்கிருந்தோ அறைக்குள் வரும். வீர சாவர்க்கர் அந்த பறவையின் சிறகுகளில் அமர்ந்து தாய்நாட்டிற்கு ஒவ்வோர் நாளும் வருவது வழக்கம் என்று எழுதியிருக்கிறார்.
ஆசிரியரும் தரவு விஞ்ஞானியுமான அருண் கிருஷ்ணன், "நமது பள்ளி பாடப்புத்தகங்களில் சாவர்க்கரை சேர்க்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதை இப்படித்தான் செய்ய வேண்டுமா? சாவர்க்கரே இதைப் பார்த்து வெட்கப்பட்டிருப்பார்," என்கிறார்.
ஆனால், இப்படி எழுதப்படுவதை ஒரு உருவகமாகவே ஆசிரியர் பயன்படுத்தியதாக அரசாங்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே, "இது ஒரு உருவகத்துக்காகச் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.
இருப்பினும், பாட புத்தக சங்கத்தின் நிர்வாக இயக்குநர் மாதேகவுடா பிபிசி ஹிந்தியிடம் பேசும்போது, "இது ஆசிரியரின் கற்பனை வள உரை. அதை இடம்பெறச் செய்யும் முடிவை பாடநூல் திருத்தக் குழு எடுத்துள்ளது. இது வரை எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து அந்த வரிகளை நீக்குவது தொடர்பாக எந்த உத்தரவும் வரவில்லை," என்று கூறினார்.
பாஜக என்ன சொல்கிறது?
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டுக்கான பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், வீர சாவர்க்கர் தாய்நாடு மீது கொண்டுள்ள காதல் அவரை மக்களுடன் எப்படி இணைத்தது என்பதை சொல்ல ஆசிரியர் கற்பனையின் உதவியை பயன்படுத்தியுள்ளார். அதை யதார்த்த கண்ணோட்டத்துடன் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. நீங்கள் கற்பனை செய்தால், உலகில் பல இடங்களில் கூட உங்களால் இருக்க முடியும்," என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலை கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தொடரும் சர்ச்சைகடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பாட புத்தகங்களில் உள்ள உள்ளடக்கம் தொடர்பான வேறொரு விவகாரம், கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
12 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியும் லிங்காயத் சமூகத்தை நிறுவியவருமான பசவண்ணா தொடர்பான தகவல்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன.
லிங்காயத் துறவி, தத்துவஞானி மற்றும் கவிஞரான பசவேஸ்வரா என்றழைக்கப்படும் பசவண்ணா பற்றி 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தின் 27ஆவது பக்கத்தில் அவரைப் பற்றிய ஒரு அத்தியாயத்தில், 'பசவண்ணா தனது உபநயனத்திற்குப் பிறகு கூடலசங்கத்துக்குச் சென்றதாகவும் சைவ குருவின் முன்னிலையில் 'லிங்கதீக்ஷை' பெற்றதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், பசவண்ணா அவ்வாறு செய்யவில்லை என்று கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குர்றம்சாட்டினார்கள்.
சாவர்க்கர் யார்?
சாவர்க்கர் ஒரு இந்துத்துவா சித்தாந்தவாதி. அவர் 'ஹிந்துத்வா: ஹிந்து யார்?' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். அது ஆரம்பத்தில் 'இந்துத்துவாவின் அத்தியாவசியங்கள்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1924இல் அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேராததற்காக விமர்சனங்களுக்கு ஆளானார். காந்தியின் கொலைக்கு சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது, ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது.
மத்தியில் 1998இலும் 2014இல் பாரதிய ஜநதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, வீர சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் காண்பிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்