விருத்தாசலத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை - முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
விருத்தாசலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரியாக படிக்க முடியாத மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடத்தை சேர்ந்த தம்பதி கோபி மற்றும் இளவரசி. விருத்தாசலத்தில் உள்ள செல் சர்வீஸ் சென்டரில் கோபி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது மகள், விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி மாதாந்திர தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி விட்டு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சூழலில் நீண்ட நேரமாகியும் வெளியே வராது மாணவியின் அறைக்கு சென்று பெற்றோர் பார்த்த போது அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே மாணவியின் மரணம் தொடர்பாக தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர், இறுதி சடங்குக்காக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, உடல் கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
"மாணவி விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி முன்பு நன்றாக படித்ததாகவும், தற்போது சரியாக படிக்கவில்லை என்று மாணவியின் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு திட்டியுள்ளனர். மேலும் மகளை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு மாணவியின் பெற்றோருக்கு இருந்துள்ளது. அதனால் மாணவியின் படிப்பு விஷத்தில் அழுத்தம் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்வில் தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்று அருகே உள்ளவர்களிடம் கூறி கவலையுடன் இருந்துள்ளார்.
குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக மன அழுத்தத்தில் இருந்த மாணவி நேற்று வீட்டின் அறையில் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் மகள் தங்கியிருந்த அறைக்கு அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர், மாணவியின் உடலை இன்று காலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் ,காவல் துறைக்கு தகவல் தெரிந்த பின்னர் மாணவியின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை அனுப்பி வைத்தோம்," என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி தற்கொலை தொடர்பாக அவர் படித்த பள்ளிக்கு எந்த தொடர்பும் இல்லை என இதுவரை நடந்த முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் காவல்துறையினர் கூறினர்.
தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி உதவி எண் '104'

பட மூலாதாரம், Getty Images
அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.
`இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













