You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடுவதாக காணொளி - உண்மை என்ன?
வாட்ஸ்ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக பகிரப்படும் ஒரு காணொளியில், ஸ்மார்ட்வாட்ச் அல்லது அதுபோன்ற சாதனத்தைப் பயன்படுத்தி வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள டிஜிட்டல் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்களை பீதியடைய வைத்திருக்கும் இந்த காணொளியில் தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இந்த காணொளியில் பகிரப்படும் தகவல்கள், காண்பிக்கப்படும் காட்சிகள் உண்மையா போலியா என்பதை உறுதிப்படுத்தும் முன்பே சமூக ஊடகங்களில் பிரபலங்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்பட பலரும் இதை அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த காணொளியில், ஒரு ஊர்ப்பகுதியில் நின்ற காரின் முன்பக்க கண்ணாடியை ஒரு சிறுவன் துணியால் துடைப்பது போலவும் காரின் போனட் மீது ஏறி அந்த சிறுவன் கண்ணாடியைத் துடைக்கும்போது அவனது கையில் கைக்கடிகாரம் போன்ற ஸ்மார்ட்வாட்ச் ஃபாஸ்ட்டேக் பகுதியைத் துடைக்கும்போது சிவப்பு நிறத்தில் ஸ்கேன் செய்த மறுகணமே அந்த சிறுவன் புறப்படத் தயாராவது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அந்த காருக்குள் இருக்கும் நபர் அந்த சிறுவனை அழைத்து காரை துடைத்து விட்டு பணம் வாங்காமல் போகிறாயே என கேட்க, அதற்கு அந்த சிறுவன், ஆமாம், பணம் கொடுங்கள் என கேட்கிறார். அப்போது அந்த சிறுவனிடம் உன் கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை காண்பி என கூறும்போது அந்த சிறுவன் அங்கிருந்து ஓட, அவனை காருக்குள் இருந்து இறங்கிய நபர் விரட்டி ஓடுகிறார். பிறகு அந்த முயற்சி பலனளிக்காமல் காருக்கே அந்த இளைஞர் திரும்பி வருகிறார்.
இதைத்தொடர்ந்து காருக்குள் ஓட்டுநர் இருக்கையில் இருக்கும் மற்றொரு நபர், "இதுதான் இப்போது புதிய வகை ஃபாஸ்ட்டேக் மோசடி" எனக் கூறி அது ஃபாஸ்ட் டேக் பார்கோட் ஸ்கேனிங் மூலம் நடப்பதாகவும் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஃபாஸ்ட் டேக் கணக்கில் உள்ள பணம் திருடப்படுவதாகவும் கூறி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
வைரலாகும் வதந்தி
இந்தி மொழியில் இந்த தகவல்களை அந்த நபர் பேசுகிறார். இந்தக் காணொளியின் உண்மைத் தன்மை பற்றி அறியாமல் பலரும் "எனது ஃபாஸ்ட் டேக்கில் கூட பணம் திருடப்பட்டுள்ளது," என்றும் நான் செல்லாத இடத்துக்கு ஃபாஸ்ட்டேக் மூலம் பணம் கழிக்கப்பட்டதாக எனக்கும் செய்தி வந்துள்ளது என்றும் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
இந்தியாவில் நெடுஞ்சாலைகளை கடக்கும்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை அமலில் இருந்த கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கடக்கும் முறைக்கு பதிலாக, ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களில் ரீசார்ஜ் முறையில் பணம் கழிக்கப்படும் வசதி 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டது. இத்தகைய ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் சுங்கச்சாவடியை கடக்க வாகனங்கள் முற்பட்டால் அவற்றுக்கு அந்த சாவடியில் வசூலிக்கப்படும் வாகனத்துக்குரிய கட்டணத்துக்கு நிகராக மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் தற்போது கிட்டத்தட்ட 90 சதவீத வாகனங்கள் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டியதை உறுதிப்படுத்திக் கொண்டே சுங்கச்சாவடிகளை கடக்கின்றன. கார், லாரி, பேருந்து போன்ற இலகு மற்றும் கனரக புதிய வாகனங்கள் வாங்கப்படும்போது ஷோரூம்களிலேயே இந்த ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாகனங்கள் உரிமையாளரிடம் விற்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் மூலம் நூதன திருட்டு நடத்தப்படுவதாக காணொளி பரவியதால் வாகன உரிமையாளர்கள் கலக்கம் அடைந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் சேவையை வழங்கும் பேடிஎம் நிறுவனம், சமீபத்தில் பகிரப்பட்ட காணொளியை போலி என்று அறிவித்து தமுத சமூக ஊடக பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
"FASTagஐ ஸ்மார்ட்வாட்ச் மூலம் ஸ்கேனிங் செய்ய முடியும் என்பது போல தவறாகக் காட்டும் ஒரு காணொளியில், Paytm FASTag பற்றிய தவறான தகவல் பகிரப்படுகிறது. NETC வழிகாட்டுதல்களின்படி, FASTag கட்டண வசூல் முறையை, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களால் மட்டுமே தொடங்க முடியும். Paytm FASTag முற்றிலும் பாதுகாப்பானது," என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காணொளி போலியானது என்றும் ஃபாஸ்ட்டேக் பரிவர்த்தனைகள் திறந்தவெளி இணையத்தில் நடக்காது என்றும் இந்திய அரசின் தகவல் துறையான பிஐபியும் கூறியுள்ளது.பிஐபி போலி தகவல்கள் சரிபார்ப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கியிருக்கும் உண்மை சரிபார்ப்பு ட்விட்டர் பக்கத்தில் , "வாகனங்களில் #Fastagஐ ஸ்வைப் செய்ய கடிகாரங்கள் போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாக வைரல் வீடியோ கூறுகிறது. இந்த வீடியோ போலியானது. அத்தகைய பரிவர்த்தனைகள் சாத்தியமில்லை. ஒவ்வொரு டோல் பிளாசாவிலும் ஒரு தனிப்பட்ட குறியீடு உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் இருந்து ஃபாஸ்ட்டேக் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ஆன்லைனில் பிடித்தம் செய்யும் பொறுப்பு வகிக்கும் தேசிய பேமென்ட்ஸ் கார்பரேஷன் இந்த போலி காணொளிகளை சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு முறை ஃபாஸ்டேக் ஸ்டிக்கரில் உள்ள பார்கோட் மூலம் பணம் கழிக்கப்படும்போதும் தொழில்நுட்ப ரீதியாக அது எவ்வாறு செயல்படும் என்பதையும் விளக்கி அதில் தவறே நடக்க வாய்ப்பில்லை என்றும் என்பிசிஐ கூறியுள்ளது.
இந்த காணொளி போலி என்று அறிவிக்கப்பட்டபோதும், அதில் இடம்பெற்றுள்ள நபர் எதற்காக இப்படியொரு போலியான தகவலை பகிர்கிறார், அதில் இடம்பெற்ற நபர் யார், ஸ்மார்ட் வாட்ச் சாதனத்துடன் காரை துடைப்பது போல வந்த சிறுவன் யார், இவர்கள் எல்லாம் எங்கிருப்பவர்கள் போன்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து மத்திய உள்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட காணொளி பற்றி விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்