You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி ஜஹாங்கிர்புரி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை – 14 பேர் கைது
டெல்லியில் ஜஹாங்கிர்புரி என்ற இடத்தில் இரு சமூக மக்களுக்கு இடையே சனிக்கிழமையன்று வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக 14 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வன்முறை, மோதல்கள் சனிக்கிழமை நடந்த அனுமன் ஜெயந்தியின் ஊர்வலத்தை ஒட்டி நிகழ்ந்துள்ளது.
இந்த வன்முறையில் காவல்துறையை சேர்ந்த சிலரும் காயமடைந்துள்ளனர்.
மேலும் கல்வீச்சு சம்பவங்களும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டெல்லி காவல்துறை மூத்த அதிகாரிகளிடம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கை காக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறை ஆணையர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல மக்கள் எந்த ஒரு வதந்திகளையும், போலிச் செய்திகளையும் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"டெல்லி ஜஹாங்கிர்புரி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த கல்வீச்சு கண்டனத்துக்குரியது. குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்," என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை நிலை ஆளுநரிடம் இதுகுறித்து பேசியதாகவும், அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காவல்துறையை சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 9 பேர் காயமடைந்துள்ளதாக வட மேற்கு மாவட்ட டிசிபி உஷா ரங்கனானி தெரிவித்துள்ளார். காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துணை காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கி குண்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நலம் தற்போது சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை வெடித்தது எப்படி என்று நேரில் கண்டவர்களிடம் பேசியதாகவும், அவர்களின் பதில்கள் வெவ்வேறுவிதமாக இருந்ததாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் சிலர், எந்த வித தூண்டுதலும் இல்லாமல் ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடந்ததாகவும், பிறகு கல்வீச்சு தூண்டப்பட்டு வன்முறை வெடித்ததாகவும் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஊர்வலத்தில் வன்முறையைத் தூண்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும், சிலர் மசூதியில் கொடியேற்ற முயன்றதாகவும் இதன் பிறகே பதற்றம் உருவானதாகவும் கூறினர் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி.
நடந்தது என்ன என்பதை பிபிசி சுயாதீனமாக கள ஆய்வு செய்து வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்