You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசத்தில் ரிக்ஷா இழுப்பவரிடம் ரூ. 3.47 கோடி வரி கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ்
உத்தர பிரதேசத்தில் ரிக்ஷா இழுத்து பிழைத்து வரும் ப்ரதாப் சிங் என்பவர், 3.47 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என வருமான வரித் துறையினரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது..
அம்மாநிலத்தின் பாகல்பூர் பகுதியில் உள்ள அமர் காலனியில் வசிக்கும் ப்ரதாப் சிங், வருமான வரித் துறையினரின் நோட்டீஸைப் பெற்ற பின், ஹைவே காவல் நிலையத்தில், தன் பான் அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாக புகாரளித்துள்ளார்.
இதுவரை ப்ரதாப் சிங்கின் புகார் அடிப்படையில் வழக்கு பதியப்படவில்லை என்றும், ஆனால் அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் நிலைய அதிகாரியான அனுஜ் குமார் கூறினார்.
இதற்கிடையில் வருமான வரித் துறையினரிடமிருந்து வந்த நோட்டீஸ் தொடர்பான விவரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ப்ரதாப் சிங்.
ப்ரதாப் சிங்கிடம்அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி, பான் (PAN) எண்ணைக் கேட்டுள்ளது. எனவே, கடந்த மார்ச் 15ஆம் தேதி பாகல்பூரில் உள்ள, தேஜ் பிரகாத் உபாத்யாய் என்பவருக்குச் சொந்தமான ஜன் சுவிதா கேந்திராவில் பான் அட்டைக்கு விண்ணப்பித்ததாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து பாகல்பூரைச் சேர்ந்த சஞ்ஜய் சிங் பான் அட்டையின் வண்ன நகலை வழங்கினார். ப்ரதாப் கல்வியறிவு இல்லாதவர் என்பதால், அவரால் உண்மையான பான் அட்டை எது, நகல் எது என அடையாளம் காண முடியவில்லை என காணொளியில் கூறியுள்ளதாக பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
பான் அட்டையைப் பெறுவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு அலைந்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வருமான வரித் துறையினரிடமிருந்து ப்ரதாப் சிங்குக்கு 3,47,54,896 ரூபாய் செலுத்துமாறு அழைப்பு வந்துள்ளது. அதோடு நோட்டீஸும் வழங்கப்பட்டது.
அதிகாரிகளிடம், தன் பெயரில் யாரோ ஜிஎஸ்டி எண்-ஐ வாங்கி வியாபாரம் நடத்துவதாக கூறினார் ப்ரதாப். 2018 - 19 காலகட்டத்தில் அந்த வர்த்தகரின் மொத்த வருடாந்திர விற்பனை மதிப்பு (டேர்ன் ஓவர்) 43,44,36,201 ரூபாயாக உள்ளது என பிடிஐ முகமையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன் விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்திலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பெற்று வருமாறு, வருமான வரித் துறையினர் அறிவுரை வழங்கியதாகவும் ப்ரதாப் சிங் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்