தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: ஐடிஐ, தொழிற்பயிற்சி நிறுவனங்களைத் திறக்க அனுமதி

கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐகள், தட்டச்சு - சுருக்கெழுத்து நிறுவனங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்திருக்கும் அறிக்கையில், மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து ஆகியவற்றுக்கு ஜூலை 31ஆம் தேதிவரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றையும் திறக்க அனுமதியில்லை.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITIs, Industrial Schools), தட்டச்சு-சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், பள்ளிக்கூடங்களில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :