#FACTCHECK அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா?

அமுல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி தற்போது அதிகமாக பரவி வருகிறது. இந்த செய்தி பால் நிறுவனமான அமுலுடன் தொடர்புடையது.

"இந்து ஒற்றுமையை நோக்கி ஒரு அடி ... அமுல் மில்க் உரிமையாளர் ஆனந்த் சேத் தனது தொழிற்சாலையில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரம் முஸ்லிம்களை வெளியேற்றினார். நாட்டின் இழிவான ஜிஹாத்தைப் பார்க்கும்போது, அழுக்கு பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றை எங்களால் மக்களுக்கு அளிக்க முடியாது. மாடு எங்களுக்கு பால் தருகிறது, எங்கள் வணிகம் அப்படித்தான் நடக்கிறது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் சேத் கூறினார் . வேறு சில சமூகத்தினர் இதை சாப்பிடுகிறார்கள். இது எங்களுக்கு அவமானம். இதுபோன்ற கொலையாளிகளை எங்கள் நிறுவனத்தில் வைத்திருக்க முடியாது. அத்தகைய நடவடிக்கை எடுத்ததற்காக அமுல் பால் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி.... " என்று வைரலான செய்தி தெரிவிக்கிறது.

உண்மை என்ன?

குஜராத்தின் ஆனந்தை தளமாகக் கொண்ட அமுல் நிறுவனம் அதன் பால் பொருட்களுக்காக நாடு முழுவதும் அறியப்படுகிறது.

இந்த செய்தி வாட்ஸ்அப் , ட்விட்டர் முதல் ஃபேஸ்புக் வரை எல்லா சமூக ஊடக தளங்களிலும் பகிரப்படுகிறது. இந்தக் கூற்றின் உண்மையை கண்டறியுமாறு பல பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் பிபிசியை கேட்டுக்கொண்டனர்.

அமுல் நிறுவனம் இதுபோன்ற ஏதாவது முடிவை எடுத்துள்ளதா என்பதை அறிய, முதலில் அமுலின் ட்விட்டர் கணக்கு மற்றும் வலைத்தளத்தை தேட தொடங்கினோம்.

நிறுவனத்தின் வலைத்தளத்திலோ அல்லது அதன் ட்விட்டர் கணக்கிலோ அத்தகைய தகவல்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இதற்குப் பிறகு, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதியை நேரடியாக தொடர்பு கொண்டோம்.

அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி

இது குறித்து ஆர்.எஸ்.சோதியிடம் நாங்கள் கேட்டபோது, ​​"இதுபோன்ற செய்திகள் எவ்வாறு பரவுகின்றன என்பது எங்களுக்குத் தெரியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பணியாளரைக்கூட நாங்கள் பணிநீக்கம் செய்யவில்லை. ஏனெனில் எங்கள் வணிகம் வளர்ந்துவருகிறது. நாங்கள் ஒரு ஊழியரை அகற்றினாலும்கூட அதற்கு மதம் ஒருபோதும் அடிப்படையாக இருக்காது," என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள அமுலின் தொழிற்சாலைகளில் 16,000 முதல் 17,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள், சமூக-மத பின்னணியின் அடிப்படையில் அல்ல என்று ஆர்.எஸ்.சோதி திட்டவட்டமாகக்கூறினார்.

யார் இந்த ஆனந்த் சேத்?

வைரலாகி வரும் செய்தியில் ஆனந்த் சேத் என்ற நபர் அமுலின் தலைமை நிர்வாக அதிகாரி என்று கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த ஆனந்த் சேத் யார்?

இது அமுல் நிறுவனத்தின் உரிமையாளரின் பெயர் அல்ல,கூடவே இது எந்த அமுல் ஊழியரின் பெயரும் அல்ல என்று இந்தக்கேள்விக்கு சோதி பதில் அளித்தார்.

அமுலுடன் 36,000 விவசாயிகள் பணிபுரிகின்றனர். அவர்கள் வெவ்வேறு மதத்தையும் சமூகத்தையும் சேர்ந்தவர்கள். ஆனந்த் சேத் என்ற பெயரில் யாருமே நிறுவனத்தின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இல்லை.

அமுல் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் சேத் பெயரில் செய்தி பரப்பப்படுகிறது. உண்மையில் அந்த பெயரில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யாரும் இல்லை என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்தது.

அமுல் ஒரு கூட்டுறவு நிறுவனம் . 1950 ஆம் ஆண்டில் டாக்டர் வர்கீஸ் குரியன் இதை நிறுவி, அதற்கு பால் நிறுவனத்தின் வடிவத்தை வழங்கினார். இன்று இந்த நிறுவனத்தின் வருவாய் 52 ஆயிரம் கோடி.

தொழிற்சாலையில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 17,000 என்று நிறுவனம் கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவனம் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை.

ஆகவே இந்த வைரல் செய்தியில் கூறப்பட்டுள்ள எல்லா விஷயங்களுமே தவறானவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :