கொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்கைப்படி புதிய விலைகளை அறிவித்துள்ளது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா.

இது நாள் வரை, தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் மக்களுக்கு தலா ரூ.250 விலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது.

ஆனால், தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, மாநில அரசுகளுக்கு இனி ஒரு டோஸ் ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 விலையிலும் கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதே நேரம் தங்கள் உற்பத்தியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு எப்போதும் போல ரூ.150 விலையில் வழங்கவுள்ளதாகவும் சீரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

என்ன விலையில் கிடைக்கும்?

தனியார் மருத்துவமனைகளும், மாநில அரசுகளும் இப்படி அதிக விலையில் வாங்கும் தடுப்பூசியை என்ன விலைக்கு மக்களுக்கு விநியோகிப்பார்கள் என்பது தெரியவில்லை.

எப்போது வெளிச் சந்தையில்?

உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற இந்த தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அதர் பூனாவாலா இந்த விலை உயர்வு அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடுப்பூசி உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும் என்றும், தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் மத்திய அரசு அறிவித்த திட்டத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்."மேலும், நிலைமை சிக்கலாகவும், அவசரமாகவும் உள்ளதால் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் தனித்தனியாக தடுப்பூசியை சப்ளை செய்வது சவாலானது. கார்ப்பரேட் நிறுவனங்களும், தனி நபர்களும் அரசு செய்துள்ள ஏற்பாடுகளின் வாயிலாகவும், தனியார் சுகாதார அமைப்புகளின் வாயிலாகவும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். 4 - 5 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி தாராள வர்த்தகத்தில், சந்தையில் கிடைக்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதர் பூனாவாலா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: