புதுவை லாக்டவுன்: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தோடு வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பதால் புதுச்சேரி அரசு அடுத்தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியன்று முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டது, மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்து அதில் ஒன்று.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:

புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மற்ற நாட்களில் அங்காடிகள் பகல் 2 மணி வரை இயங்கும். பகல் 2 மணிக்குப் பிறகு உணவு விடுதிகளில் உணவு வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி.

திருமண நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட அளவில் மட்டும் ஆட்கள் பங்கேற்க அனுமதி உண்டு. ஊர்வலங்கள், கோயில் தேரோட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்க நாளை(புதன்கிழமை) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: