டெல்லி விவசாயிகள் போராட்டம்: 2 சங்கங்கள் திடீர் விலகல் ஏன்?

பட மூலாதாரம், PALLAV BAGLA CORBIS VIA GETTY IMAGES
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் இருந்து தங்கள் சங்கங்கள் விலகிக் கொள்வதாக இரண்டு வேளாண் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் சங்கங்கள் இந்திய குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார். விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் பல நூறு பேர் காயமடைந்தனர்.
விலகும் விவசாய அமைப்புகள் என்ன சொல்கின்றன?
வேறு திசையில் செல்லும் இந்தப் போராட்டத்தில் மேற்கொண்டு தங்களால் ஈடுபட முடியாது என்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனும் அமைப்பின் வி.எம். சிங் தெரிவித்துள்ளார்.
"இந்த வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது; விவசாயிகள் உரிமைக்கான எங்கள் போராட்டம் தொடரும். ஆனால், இந்த வழியில் அல்ல," என்று அவர் கூறினார்.
பாரதிய கிசான் சங்கத்தின் ஒரு பிரிவும் இந்த போராட்டத்தில் இருந்து தாங்கள் விலகுவதாக அறிவித்துள்ளது. பாரதிய கிசான் சங் (பானு) பிரிவின் தாக்கூர் பானு பிரதாப் சிங் சில்லா எல்லையில் தங்கள் முற்றுகையை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.
நேற்று நடந்த வன்முறை மிகுந்த கவலை தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில்லா எல்லை டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது.
'சர்தார்கள் அல்ல துரோகிகள்'
சம்யுக்த் கிஷான் மோர்ச்சா எனும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்கள் டெல்லி - ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் புதன்கிழமை மதியம் கூடி ஆலோசனை நடத்தினர்.
அதன்போது குடியரசு தினத்தின் போது நடந்த வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறிய அவர்கள்,செவ்வாய்க்கிழமை செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறினர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் சர்தார்கள் அல்ல 'கத்தார்கள்' என்று அப்போது அவர்கள் கூறினர். 'கத்தார்' என்றால் இந்தியில் துரோகி என்று பொருள்.
சீக்கியர்களின் 'நிஷான் சாகிப்' கொடி ஏற்றப்பட்ட, செங்கோட்டை வன்முறைக்கு பஞ்சாபி நடிகர் தீப் சித்து காரணம் என்றும் சில வேளாண் அமைப்பினர் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு தின டிராக்டர் பேரணி

பட மூலாதாரம், SAMEER SEHGAL/HINDUSTAN TIMES VIA GETTY IMAGE
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி போலீசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு ஜனவரி 26 (செவ்வாய்க்கிழமை) காலை தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தன.
இதையடுத்து, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதில் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த கைகலப்பில் 86 அதிகாரிகள் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
அதே சமயம், போராட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த விவசாயி சுட்டுக்கொல்லப்படவில்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுவதாக உத்தரப்பிரதேச காவல்துறை கூறுகிறது.
பிற செய்திகள்:
- ஜெயலலிதா நினைவிடம்: எதற்கு எவ்வளவு பணம்? சிறப்புகள் என்னென்ன?
- சீர்காழியில் இருவரைக் கொன்று நகை கொள்ளை; என்கவுன்டரில் ஒருவர் பலி
- குடியரசு நாள் வன்முறை: போராடும் விவசாயிகளுக்கு இனி வரும் சவால்கள்
- சசிகலா சிறையிலிருந்து விடுதலை: கொரோனா சிகிச்சை பெங்களூரில் தொடரும்
- ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய்: குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












