அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

    • எழுதியவர், சீமா சிஷ்டி
    • பதவி, பிபிசிக்காக

(இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)

அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

குஜராத்தில் புனரமைக்கப்பட்டு சோம்நாத் கோயிலை திறந்துவைக்க 1951ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அரசு சார்ந்த விடயங்களிலிருந்து மதத்தை தனித்து வைப்பதில் மிகவும் உறுதியாக இருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்துக்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், "இந்த நிகழ்வுக்கு நீங்கள் தலைமை தாங்கவில்லை என்றால் அது நல்லது" என்று குறிப்பிட்டிருந்தார். பல்வேறு முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் கீழ் கேட்பாரற்று கிடந்த சோம்நாத் கோயில் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் தகர்க்கப்பட்டது.

1947ஆம் ஆண்டில் சர்தார் படேல் அதைப் பார்வையிட்டபோது, அதன் மறுகட்டமைப்பு தொடங்கி 250 ஆண்டுகள் கடந்திருந்தன. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற நிகழ்வில் அரசு சார்பில் ராஜேந்திர பிரசாத் கலந்துகொள்வது மேலும் பிரச்சனையை தீவிரமாக்கும் என்று நேரு கவலை கொண்டார். "துரதிர்ஷ்டவசமாக, இதனால் பல தாக்கங்கள் உள்ளன…" என்று நேரு எழுதினார். "இந்த நேரத்தில் சோம்நாத் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்று நான் நினைத்தேன்." நேருவின் ஆலோசனையை புறக்கணித்து ராஜேந்திர பிரசாத் அந்த நிகழ்வுக்கு சென்றார். ஆனால், அங்கே அவர் முழுமையான சகிப்புத்தன்மை குறித்த காந்திய வழியை, மதங்களின் சாராம்சத்தில் கவனம் செலுத்துவதை, நல்லிணக்கத்தை அவர் வலியுறுத்தினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆனால், வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும், சோம்நாத் நிகழ்வையும் பொருத்திப் பார்க்க முடியாது. தலித் சமூகத்தை சேர்ந்த இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் கொரோனா வைரஸ் உலகத் தொற்றுப் பரவல், மோசமான நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தலில் இருக்கும் இந்தியாவின் கிழக்கு எல்லைப்பகுதி உள்ளிட்டவை இந்த விழாவில் பங்கேற்பதற்கு இந்திய பிரதமருக்கு எவ்வித வகையிலும் தடையாக இல்லை. மாறாக, இந்த நிகழ்வு ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்டு, அதற்காக நாட்டைத் தயார்படுத்துகிறார்கள்.

சரயு ஆற்றங்கரையில் உள்ள இந்தியாவின் மிக அழகான நகரங்களில் ஒன்றான அயோத்தி ஒரு செழிப்பான கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இதை பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் சாகேத் என்று கூறுகின்றனர். ராம ஜென்ம பூமி வளாகம் ஒருகாலத்தில் புத்த மத தலமாக இருந்ததாக கூறிய பௌத்த பிக்குகள், அந்த இடத்தை யுனெஸ்கோ அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி ஆசாத் பவுத் தரம் சேனா அமைப்பு சார்பில் அங்கு உள்ளிருப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

சமணர்கள் உரிமை கோரும் இந்த இடத்தில் சீக்கியர்களுக்கும் தொடர்பு உள்ளது. மேலும், இதே இடத்தில்தான் பாபர் மசூதி 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இதை ராமர் பிறந்த இடமாக கூறுவதை விட இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் நல்லிணக்க மையமாக மாற்றியிருக்க முடியும்.

ஆனால் வேறு விதமான அரசியலை கூர்மைப்படுத்துவதற்கான கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அமைதியற்ற இளம் தலைமுறையினரிடையே சமநிலையை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக அல்லாமல், மத நம்பிக்கையை கசப்பான பிரிவினை உண்டாக்கும் கருவியாக மாற்ற இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த விவகாரத்தின் கடந்த காலம் கடுமையானது. இந்தியர்களை 'எழுப்ப' ஒரு ரத யாத்திரை ஒன்று 1990ல் எல்.கே. அத்வானியால் தொடங்கப்பட்டது. இந்த பிரசாரம் இந்தியாவின் எட்டு மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்டது. ஆனால், இது இந்தியாவின் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த மண்டல் கமிஷனின் அறிக்கையை வி.பி. சிங் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதை திசைதிருப்புவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது.

அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

1990ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் நடந்த இந்த பிரசாரத்தின் காரணமாக சுமார் 300 பேர் இறந்ததாகவும், மேலும் கலவரங்களும் வன்முறைகளும் ஏற்பட்டதாகவும் அரசியல் அறிஞர்களின் பதிவுகள் கூறுகின்றன. இதையடுத்து பீகாரின் அப்போதைய முதலமைச்சர் லாலு பிரசாத் சமஸ்திபூரில் அத்வானியின் வேனை நிறுத்தி இதை முடிவுக்கு கொண்டுவந்தார். இதைத்தொடர்ந்து, 1992இல் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட சம்பவம் இந்திய குடியரசை உலுக்கியது மட்டுமின்றி, இது மரணங்களுக்கும் சமூக பிளவுகளுக்கும் வித்திட்டது.

2019ஆம் ஆண்டில் அயோத்தி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், முழு நிலத்தையும் கோயிலுக்கு வழங்கிய போதிலும், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று மசூதியை இடித்தது "மிக மோசமான சட்ட விதிமீறல்" என்றும் "பொது வழிபாட்டுத் தலத்தை அழிக்கும் திட்டமிடப்பட்ட செயல்" என்றும் தெரிவித்திருந்தது.

இருந்தபோதிலும், அயோத்தி ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமரே செல்வது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு உலுக்கப்பட்டது என்றால், இந்த நிகழ்வு இந்திய குடியரசாக நாம் தற்போது அங்கீகரித்திருக்கும் கட்டமைப்பை வேறு ஏதோவொன்றாக மாற்றுவதாக அச்சுறுத்துகிறது.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் நகரில் வசிக்கும் ஆய்வாளரும், 'தி எமர்ஜென்சி க்ரோனிகல்ஸ்' என்ற தனது புத்தகத்திற்காக விருது வென்ற எழுத்தாளருமான பேராசிரியர் ஞான் பிரகாஷ், "இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது சம குடியுரிமைக்கான அரசியலமைப்பு கொள்கையின் அடித்தளத்தின் மீதான தாக்குதலாகும். ஒரு மதச்சார்பற்ற குடியரசின் யோசனை ஒருபுறம் இருக்க, மதத்தைப் பொருட்படுத்தாமல் சம குடியுரிமையின் அடிப்படை ஜனநாயகக் கொள்கை கூட இனி பாதுகாப்பாக இருக்காது. பாஜக அரசாங்கமும், அச்சுறுத்தப்பட்ட நீதித்துறையும் ஒரு எதேச்சதிகார இந்து ராஷ்டிரத்திற்கு முறையாக அடித்தளம் அமைத்து வருகின்றன. அம்பேத்கரும் நேருவும் தங்கள் கல்லறைகளில் புரள்வார்கள்" என்று கூறுகிறார்.

அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

நார்வேஜியன் ஸ்கூல் ஆஃப் தியாலஜியை சேர்ந்த ஆய்வாளரான எவியன் லீடிக், "இது ஒரு நீண்ட செயல்முறையின் புதிய தொடக்கம் என்பது மட்டுமின்றி இந்திய குடியரசு மாற்றியமைக்கப்படுவதும் ஆகும். ஆகஸ்டு 5ஆம் தேதி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுவது, 1992இல் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதுக்கு பிறகு இந்துத்துவா இயக்கம் சந்திக்கும் ஒரு வரலாற்று தருணத்தை பிரதிபலிக்கிறது.

ஒரு காலத்தில் கொடிய கலவரத்தால் மேற்கொள்ளப்பட்ட செயல், இன்று அரசாங்க ஆதரவுடைய முயற்சிகளால் சட்டபூர்வமானது. ராமர் கோயிலைக் கட்டுவது ஒரு பெரும்பான்மை தேசியவாதத்தைக் குறிக்கிறது. இதில் இந்து மதம் மற்ற எல்லா மதங்களுக்கும் மேலாக மதிப்பிடப்படுவதை போன்று தெரிகிறது. இது மோதி அரசிடமிருந்து நாம் சந்திக்கும் இந்துத்துவ பொருண்மை கொண்ட கடைசி நிகழ்வாக இருக்காது."

முதல் இந்திய குடியரசான 'நேரு' சகாப்தத்தில் சூரியன் மறைந்திருந்தால், இது இரண்டாவது இந்திய குடியரசின் உறுதியான சமிக்ஞை என்று சில வல்லுநர்கள் நம்புகிறார்கள். இந்த கட்டத்தில் நம்பிக்கை அல்லது இனத்தை குடியுரிமையுடன் தொடர்புபடுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இணைகிறது.

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை விட அது மேற்கொள்ளப்படும் தேதி இன்னும் அதிகம் உணர்த்துவதாக பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் கூறுகிறார். "கடந்த ஆண்டு இதே நாளில்தான் ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டது. ஒரே தேதியில் மேற்கொள்ளப்படும் இரண்டு விடயங்களும் அரசியலமைப்பின் பன்முக கலாச்சாரத்தை முதலாக கொண்டு இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளன. இதன் மூலம், இஸ்ரேல், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் வரிசையில் இந்தியாவும் காலடி எடுத்து வைக்கிறது."

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

மகாத்மா காந்தி, ஆகஸ்ட் 9, 1942இல் ஹரிஜனில் இவ்வாறாக எழுதினார் - "இந்துஸ்தான் இங்கு பிறந்து வளர்ந்தகள், வேறெந்த நாடும் இல்லாதவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது. எனவே, இது பார்சிக்கள், பெனி இஸ்ரேலியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற இந்து அல்லாதவர்கள் என அனைவருக்குமானது. சுதந்திர இந்தியாவில் எந்த இந்து அரசும் இருக்காது, இது எந்தவொரு மத பிரிவினருக்கோ அல்லது சமூகத்தினருக்கோ அல்லாமல், மாறாக மத வேறுபாடு இல்லாமல் முழு மக்களின் பிரதிநிதிகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசு ஆகும்."

எனவே, ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா என்பது இந்தியா அரசின் புதிய மற்றும் தனித்துவமான யோசனையின் அடித்தளமாகும். இதில் துன்பகரமான விடயம் என்னவென்றால், மிகச் சிறந்த மனிதனுக்கு அடையாளமாக கூறப்படும் ராமரின் பெயரில் இவையெல்லாம் நடக்கிறது.

தற்போது அவரை வேறொரு வகையில் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய உந்துதல் இது. இது ஒரு புதிய இந்தியா என்று அழைக்கப்படலாம். அல்லது இதனை புதிய இந்திய குடியரசின் கல்லறை வாசகம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: