கொரோனா தாக்கிய கர்ப்பிணி பெண்களுக்கு தனிக்கவனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் மட்டும் 1,515 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

''பேறுகாலம் என்பது பெண்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக உறுதியாக இருக்க வேண்டிய காலம். கொரோனா தாக்கம் அவர்களுக்கு சிக்கல்களை தரலாம் என்பதால், கர்ப்பிணி பெண்களுக்கு தனி கவனம் கொடுத்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிகுந்த உணவோடு, அவர்களுக்கு மனநல ஆலோசனை கொடுக்கப்படுகிறது. அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்க மருத்துவ பணியாளர்கள் உதவுகிறார்கள். அவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை தருகிறோம்,'' என்றார் விஜயபாஸ்கர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நுரையீரலை ஸ்கேன் செய்யவேண்டும் என்பதால், புதிய சி.டி ஸ்கேன் கருவிகள் கடந்த இரண்டு வாரங்களில், ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிறுவப்பட்டுள்ளன என்றார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சுமார் 8,000 ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 90 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையின்போது தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான அளவில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :