ஆளுநர் கிரண்பேடி வராமலே பட்ஜெட் தாக்கல் செய்த புதுவை முதல்வர் நாராயணசாமி

கிரண்பேடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரண்பேடி

புதுவை யூனியன் பிரதேச சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட உரையாற்ற வரும்படி முதல்வர் விடுத்த அழைப்பை சில காரணங்கள் கூறி ஆளுநர் கிரண் பேடி மறுத்த நிலையில், ஆளுநர் உரை இல்லாமலேயே சட்டமன்றத்தில் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கு மத்திய உள்துறை மற்றும் நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. இந் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 20) முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மானிய கோரிக்கை விவரங்களை துறை வாரியாக முழுமையாகச் சமர்ப்பிக்கவில்லை என்றும் ஆளுநர் உரையைக் கால தாமதமாக அனுப்பியதாகவும் கூறி ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட் உரையாற்ற வர மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே கூட்டத்தொடர் தொடங்குவதால், ஜனநாயக முறைப்படி ஆளுநர் இதில் பங்கேற்கலாம் என்று கூறி துணை நிலை ஆளுநருக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் அனுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் கிரண்பேடி, "பட்ஜெட்டிற்கு முழு வடிவம் பெறாமல் சட்டப்பேரவையை ஏன் கூட்ட வேண்டும் என்று கேள்வி எழுகிறது, யூனியன் பிரதேச சட்டப்படி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவையை கூட்டினால் உரையாற்றுவேன். என்னிடம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்காத சூழலில் தெரியாத அறிக்கைக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கமுடியும்," என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

நாராயணசாமி
படக்குறிப்பு, நாராயணசாமி

இந்நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 20) காலை 9:30 மணிக்குக் கூடியது. பேரவை தொடங்கி, 10 நிமிடங்கள் வரை காத்திருந்த பிறகும் துணைநிலை ஆளுநர் வராத காரணத்தினால், சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவை நிகழ்வைத் துவங்கினார். அப்போது துணை ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ஆளுநர்‌ உரை நிகழ்வைச் சபாநாயகர் ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் அடுத்த நிகழ்வான 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கூறி பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இதனையடுத்து மதியம் 12 மணியளவில் மீண்டும் கூடிய அவையில் 9,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்து பல அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

அவற்றில் சில முக்கிய அறிவிப்புகள்:

  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்குக் குடிநீர் வரி ரத்து செய்யப்பட்டு இலவச குடிநீர் வழங்கப்படும்.
  • மாதம் 100 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் உபயோகிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  • வரும் கல்வி ஆண்டில் புதிதாக வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்படும்.
  • நாடுமுழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டையில் வழங்கும் திட்டத்திற்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் குடும்ப அட்டை பெறப் பிரத்தியேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது, இது விரைவில் நடைமுறைக்கு வரும்.
  • புதுச்சேரியில் பால் உற்பத்தியைப் பெருக்கி மகாத்மா காந்தி பெயரில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
புதுச்சேரி சட்டப்பேரவை
  • பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி காலைச் சிற்றுண்டி மற்றும் ஊட்டச்சத்து திட்டமாக இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும், இத்திட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14ஆம் தேதி அமல்படுத்தப்படும்.
  • மாணவர்களின் வீடுகளுக்கே பாடத்திட்டங்கள் போதிப்பதைக் கொண்டு செல்ல கல்வி தொலைக்காட்சி மற்றும் சமூக வானொலி தொடங்கப்படும்.
  • கிராமப்புற பள்ளிகளில் மின்னணு வகுப்பறைகள் இந்த ஆண்டுக்குள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • மீனவர்களுக்கான ஈமச்சடங்கு நிதி உதவி இரண்டாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
  • முகக்கவசம் மற்றும் தேவையான உபகரணங்களை வாங்க சுகாதாரத்துறைக்கு 9.50 கோடி‌ ரூபாய் ஒதுக்கப்படும்.
  • வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் மரணமடைந்தால் ஒரு லட்சம் ரூபாயும், விபத்தில் சிக்கி ஊனமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணமும் வழங்கப்படும்.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை ரத்து செய்து இலவசக் கல்வி வழங்கப்படும்.
  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்திராகாந்தி மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு, முழு மருத்துவக்காப்பீடு வழங்கப்படும்.
  • தனியார்ப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விலையில்லா கைக்கணினி (Tablet PC) பள்ளிக் கல்வித் துறையின்‌ புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர்களுக்குத் திருமண நிதி உதவியாக 75,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது இனி ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

அதிமுக, பாஜக வெளிநடப்பு

புதுச்சேரி முதல்வர் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையை நாளை (ஜூலை 21) காலை 9:30 மணிவரை ஒத்திவைத்தார்.

முன்னதாக, முதல்வர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து கொண்டிருந்தபோது, ஆளுநர் அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரியில் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நீண்ட நாட்கள் நடக்க வேண்டிய இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை, கொரோனா நோய்த் தொற்று காரணமாக இரண்டு நாட்களுக்குள் முடித்துக்கொள்ள புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத் தொடரில், கொரோனா‌ நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பார்வையாளர் அனுமதியும் மறுக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :