இன்றைய செய்திகள்: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள் இட ஒதுக்கீடு

இந்து தமிழ் திசை - 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது .

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர்வது குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு, 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு அளிப்பதற்கான அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினர்.

அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை அளித்திருந்ததாக கூறப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி கூறுகிறது.

தினத்தந்தி - காவல் துறையினருக்கு கொரோனா தொற்று

சென்னை மாநகர காவல்துறையில் உதவி ஆணையர் ஒருவர் உள்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியிருப்பதால் காவல் துறையில் கொரோனா பாதிப்பு 1,453 ஆக உயர்ந்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

கொரோனா பிடியில் ஒரு புறம் சிக்கினாலும், சிகிச்சை பலனளித்து குணம் அடைந்து பணிக்கு உடனடியாக காவல் துறையினர் திரும்பி வருகிறார்கள். அதன்படி நேற்று 32 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரையில் 885 காவல் துறையினர் குணம் அடைந்து உள்ளனர்.

தி ஹிண்டு - பெண்களுக்கு பிரசவகால பலன் - இந்திய அரசின் பதிலைக் கேட்கும் நீதிமன்றம்

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரசவகால பலனாக மாதம் 6000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசு சாரா அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பிரசவ கால பலன் வழங்கப்பட்டது தொடர்பான நிலை அறிக்கையையும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்தே தலைமையிலான அமர்வு இந்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மூலம் இந்தச் சட்டத்தின் கீழ் ஜூலை 5, 2013 தொடங்கி இந்த பிரசவ காலப் பலனை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ் (பியுசிஎல்) எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த நிதியுதவி வழங்கப்படாமல் இருப்பது இந்தியாவின் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் பெண்களின் பேறுகால இறப்பு விகிதம் ஆகியவற்றில் மோசமான தாக்கம் செலுத்தும் எனவும் அந்த அமைப்பின் வழக்கறிஞர் காலின் கோன்சால்வ்ஸ் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்கிறது தி ஹிண்டு வெளியிட்ட செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: