சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு: மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு - மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 5 போலீசார் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பாக சிபிசிஐடி இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி. போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம்

இதனை தொடர்ந்து தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சாமதுரை ஆகிய 5 போலீசாரையும் சிபிசிஐடி கைது செய்தது. இவர்களில் எஸ்ஐ பால்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் எஸ்ஐ பால்துரை உள்ளிட்ட 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்ததரவிட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் ஒரிரு நாட்களில் நீதிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு - மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்

அறை எண் ஐந்தில் சிபிஐ

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள அறை எண் ஐந்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் சிபிசிஐடி போலிசார் இரட்டை கொலை வழக்கு தொடர்பான சில ஆவணங்களை இன்று சிபிஐயிடம் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் தொடர்பான ஆலோசனை சிபிஐ அதிகாரிகள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் நடத்தினர்.

இதன்பிறகு மதுரை மத்திய சிறையில் உள்ள சாத்தான்குளம் ஆய்வாளர் உட்பட 5 பேரை முதல் கட்டமாக எடுத்து விசாரணை நடத்தவும் இரண்டாம் கட்டமாக தடயங்களை அளித்ததாகக் கூறப்படும் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேரை விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே பென்னிக்ஸ் நண்பர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :