You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம்: காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும் - எச். ராஜா
காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும் என எச். ராஜா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் ஜீவா, ஜெயம் ரவி என சமூகத்தில் பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, “காவலர் வில்சன் படுகொலையை கண்டித்து போராடாத வர்த்தக சங்கங்கள் இன்று போராடுவது ஏன்? இந்த வர்த்தக சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
வெகுஜன விரோத போராட்டம்
அவர் பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவில், “சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு காவல் நிலையத்தில் 4 பேர் செய்த குற்றத்திற்கு காவல்துறை முழுவதையும் கண்டனத்திற்கு உள்ளாக்குவது முறையல்ல.’’ என கூறியுள்ளார்.
மேலும் அவர், ``சீனக் கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் காவல்துறை அரும் பணியாற்றி வருகிறது. இந்த நேரத்தில் காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும். காவலர் வில்சன் படுகொலையைக் கண்டித்து போராடாது வர்த்தக சங்கங்கள் இன்று போராடுவது ஏன்? இந்த வர்த்தக சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை என்பது குறித்து உளவுத்துறை எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.’’
’’இச்சம்பவத்தை அமெரிக்க ப்ளாயிட் சம்பவத்துடன் ஒப்பிட்டு சிலர் பேசுவது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேசவிரோத சீனக் கூலிகள் சீனாவின் செம்புக்கு இங்கு மார்க்கெட் உருவாக்க ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சர்ச்சில் மணியடித்து கலவரம் செய்ததை மறந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.’’
’’இந்த கொடூரமான சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித இரு கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இதை வாய்ப்பாகப் பயன் படுத்தி நாட்டை சில தீய சக்திகள் கலவர பூமியாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இதுபற்றி பேசுவோம். படிப்போம். பகிர்வோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, "காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம், பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாவது துயர்மிகுந்தது" என தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மீது நடத்தப்பட்ட கொரூரமான தாக்குதல் குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்," என ஷிகர் தவான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"காவலர்களே கொலை செய்தால் யாரை அழைப்பது" என இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித், ''பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே, நீங்கள் தான் மக்களின் அரசா?'' என எழுதியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: