நிர்மலா சீதாராமன்: விண்வெளி, விமானம், அணுசக்தி, மின்சாரம் - முக்கிய துறைகளில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி

பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த 20 லட்சம் கோடி மதிப்புடைய பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, கடந்த செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை கடந்த மூன்று நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வந்தார்.
அதாவது, கடந்த 13ஆம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசாங்க ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் வைப்பு நிதி செலுத்துபவர்கள் உள்ளிடவர்களுக்கான 15 அம்ச திட்டங்களை அறிவித்திருந்த நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்று விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 வகை திட்டங்கள் குறித்து அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) தொடர்ந்து நான்காவது நாளாக செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டதே தவிர இந்தியா தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் திட்டமல்ல" என்று கூறினார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

"இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்கவே பிரதமர் முழுமையான சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறார். நேரடி மானியத் திட்டம், ஜிஎஸ்டி போன்றவை இதில் குறிப்பிடத்தக்க திட்டங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
இன்று விண்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தி, அணுசக்தி, விமானப்போக்குவரத்து உள்ளிட்ட எட்டு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த அறிவிப்புகள் குறித்த முக்கிய விவரங்களை தொகுத்தளிக்கிறோம்.
நிலக்கரி:
நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பெற திட்டம். இதற்காக, நிலக்கரித்துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மேலும், நிலக்கரித்துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க திட்டம். முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
கனிமங்கள்:
கனிம சுரங்கங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் & நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.
சுரங்கத் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி.
ராணுவத் தளவாட உற்பத்தி:
ராணுவத் தளவாட உற்பத்தித்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிப்பு. அதே சமயத்தில், குறிப்பிட்ட சில ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும்.
உள்நாட்டிலுள்ள ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்.
விமானப் போக்குவரத்து:

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும். மேலும், இந்தியாவிலுள்ள மேலும் ஆறு விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுபோன்ற சீர்திருத்தங்களின் மூலம் விமானங்களை இயக்குவதற்கான செலவை 1000 கோடி ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் விமான பயணத்திற்கான கட்டணங்கள் குறையும்.
யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு:
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம், புதுச்சேரி உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது.
விண்வெளித்துறை:

பட மூலாதாரம், Getty Images
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.
இஸ்ரோவின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
அணுசக்தித்துறை:
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும்.
உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும்
இதுமட்டுமின்றி, மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதாகவும், மருத்துவ துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்களை உருவாக்குவதில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












