கொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி முழுமையான உரை Narendra Modi Full speech On Corona Virus

இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்தியாவைக் காப்பாற்ற ஒவ்வொரு குடிமகனைக் காப்பாற்ற உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இன்று 12 மணி முதல் வீட்டிலிருந்து வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும், மாவட்டமும், கிராமும் முழுவதுமாக அடைக்கப்படுகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார் நரேந்திர மோதி.

அப்போது அவர், "கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அந்த தொற்று சங்கிலியை நாம் அழிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தனித்திருத்தல் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.ஆனால் அது சரியல்ல. தனித்திருத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும். அது பிரதமருக்கும் பொருந்தும்." என்றார்.

"சிலரின் பொறுப்பற்ற தன்மை உங்கள் குடும்பத்தைகளுக்கும், குழந்தைகளுக்கும், ஏன் இந்த நாட்டிற்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும்," என்றார்.

"கடந்த இரு நாட்களாக நாட்டின் அநேக பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மாநில அரசின் இந்த நடவடிக்கையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்து அனுபவத்தைக் கருத்தில் கொண்டு நாடு இன்று ஒரு முக்கிய முடிவை எடுக்கவுள்ளது. இது மக்கள் ஊரடங்கு உத்தரவைக் காட்டிலும் வலுவானது," என்று கூறினார்.

"கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் போராட இதை நாம் செய்தே ஆக வேண்டும்.

இது நிச்சயமாக நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் காப்பாற்றுவதே தற்போது முக்கியம்." என்று தெரிவித்தார்.

"நீங்கள் எங்கு உள்ளீர்களோ அங்கேயே இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய சூழலைக் கண்டு 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க குறைந்தது 21 நாட்கள் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள் இந்த 21 நாட்களை நாம் சமாளிக்கவில்லை எனில் 21 வருடங்கள் பின்னோக்கி சென்று விடுவோம்," என்று கூறினார்.

“நான் இதை பிரதமராக சொல்லவில்லை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக சொல்கிறேன். எனவே காரணம் எதுவாக இருந்தாலும் 21 நாட்கள் வெளியே செல்வதை மறந்துவிடுங்கள். நீங்கள் ஒரே ஒரு முறை வெளியே சென்றாலும் கொரோனா போன்ற பெருந்தொற்றை வீட்டிற்குள் அழைத்து வர நேரலாம்.

நீங்கள் தினசரி சந்திப்பவர்களில் யாருக்கு வேண்டுமென்றாலும் கொரோனா தொற்று பரப்புவார்களாக இருக்கலாம். எனவே வீட்டிலேயே இருங்கள்.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் வெளியே தெரியப் பல நாட்கள் ஆகலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர், இந்த சமயத்தில் தெரிந்து தெரியாமலோ அந்த நபருடன் தொடர்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் அது பரவும். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒருவரால் 10 நாட்களில் நூற்றுக்கணக்கனைக்கானவர்களுக்குப் பரவும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் பொருள் இது காட்டுத்தீயைப் போன்று பரவுகிறது.

67 நாட்களில் ஒரு லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 11 நாட்களில் அது இரண்டு லட்சம் ஆனது நான்கு நாளில் மூன்று லட்சத்தைத் தொட்டது என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே எத்தனை வேகமாக இது பரவுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த தொற்று பரவ தொடங்கினால் அதை நிறுத்துவது கடினம் சீனா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ்,ஜெர்மனி, இரான் ஆகிய நாடுகளில் இதே நிலைமைதான் ஏற்பட்டது.

இத்தாலி மற்றும் அமெரிக்காவின் சுகாதார சேவைகள் உலகளவில் சிறப்பானது ஆனால் இந்த நாடுகளால் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை.

இந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய நாடுகளிடமிருந்து ஒரு நம்பிக்கை கீற்று வருகிறது, அது என்னவென்றால் பல வாரங்களாக இந்த நாட்டின் மக்கள் வீட்டை வெளியே வரவில்லை. அந்நாட்டின் மக்கள் அரசின் விதிமுறையை 100 சதவீதம் கடைப்பிடித்தனர்.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க நம்மிடமும் ஒரு வழி உள்ளது. அது நாம் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது.”

“இந்த சமயத்தில் நமது நடவடிக்கைகள் தான் இந்த கொரோனா தொற்றை தடுக்கும் நமது திறனை நிர்ணயிக்கும். ஒவ்வொரு அடியிலும் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். வீட்டிலேயே இருங்கள் இந்த கொரோனா தொற்றிலிருந்து உங்களை காப்பாற்ற தங்களின் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் மருத்துவ பணியாளர்கள் குறித்துச் சிந்தியுங்கள் என உங்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.இரவு பகலாக மருத்துவனமைகளில் பணிபுரிபவர்கள் குறித்து சிந்தியுங்கள். தூய்மை பணியாளர்கள் குறித்து யோசியுங்கள். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.உங்களுக்கு சரியான தகவலைத் தர 24 மணி நேரம் பணிபுரியும் ஊடகவியாளர்கள் குறித்தும் நீங்கள் யோசிக்க வேண்டும்

போலீஸார் குறித்து யோசியுங்கள் அவர்களின் குடும்பத்தை விட்டுவிட்டு உங்களை காப்பாற்ற அவர்கள் 24 மணி நேரமும் பணி செய்கின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவாக பணிபுரிகின்றனர்; உங்கள் தினசரி வாழ்க்கை பாதிக்காமல் இருக்க.

அவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

இந்த நெருக்கடி சூழல் ஏழை மக்களின் வாழ்வைக் கடினமான நேரத்தைக் கொண்டு வந்துள்ளது; எனவே மத்திய மாநில அரசுகள் சமூக அமைப்புகள் சேர்ந்து அவர்களின் கஷ்டத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பலர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்கள் மட்டுமல்ல உயிரைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்

நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுவாக்க 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த சமயம் சுகாதார சேவைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். இந்த சமயங்களில் பல வதந்திகள் பரவுகின்றன. எந்த வதந்திகளையும், மூடநம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

21நாட்கள் நீளமான காலம்தான் ஆனால் இதுதான் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பதற்கான வழி.”

- இவ்வாறாக அவர் பேசினார்

மோதி உரை,

  • நான் மீண்டும் கொரோனா தொற்று குறித்து உங்களிடம் பேச வந்துள்ளேன்.
  • ஒவ்வொரு இந்திய மக்களும் இணைந்து ஊரடங்கை வெற்றிகரமானதாக்கினீர்கள்.
  • குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.
  • இந்த முயற்சிகள் அனைத்தும் இருந்தும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
  • இந்த கொரோனா தொற்றை தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் மட்டும்தான்.
  • கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க இதை தவிர வேறு வழியில்லை
  • இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தனித்திருக்க வேண்டும் என தவறாக நினைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும் தனித்திருத்தலை கடைபிடிக்க வேண்டும்.
  • இன்று ஒரு முக்கிய முடிவை எடுக்க போகிறேன். இன்று இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும், லாக் டவுன் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும், மாவட்டமும் முடக்கப்படுகிறது.
  • இது ஜனதா ஊரடங்கை காட்டிலும் வலுவனாது.
  • உங்களிடம் கை கூப்பி வேண்டிக்கொள்கிறேன் தற்போது நீங்கள் நாட்டில் எங்கு உள்ளீர்களோ அங்கயே இருங்கள். இது 21 நாட்களுக்கு தொடரும்.
  • 21 நாட்களுக்கு வீட்டை விட்டு எங்கேயும் செல்லாதீர்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனாவை உங்கள் வீட்டுக்கு அழைத்து வரலாம்.
  • இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
  • 67 நாட்களில் ஒரு லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த 11 நாட்களில் அது இரண்டு லட்சம் ஆனது. அடுத்த நான்கு நாளில் மூன்று லட்சத்தை தொட்டது.
  • இந்த கொரோனா தொற்றை தடுப்பது மிகவும் கடினமானது.
  • இந்த 21 நாட்களை நாம் சமாளிக்கவில்லை என்றால் 21 ஆண்டுகள் நாம் பின் தள்ளப்படுவோம்.
  • ஊரடங்கு நேரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்.
  • இந்த சமயத்தில்தான் நமது நடவடிக்கைகள் தான் இந்த கொரோனா தொற்றை தடுக்கும்.
  • வீட்டிலேயே இருங்கள் இந்த கொரோனா தொற்றுக்காக பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் குறித்து சிந்தியுங்கள்.
  • இந்த கொரோனா தொற்றை சமாளிக்க ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளிட்டோர் நமக்காக பணியாற்றுகின்றனர்.
  • ஊடகவியாளர்கள் குறித்தும் நீங்கள் யோசிக்க வேண்டும் உங்களுக்கு சரியான தகவல்களை தர அவர்கள் பணிபுரிகின்றனர்.
  • போலீஸார் குறித்து யோசியுங்கள் உங்களை காப்பாற்ற அவர்கள் 24 மணி நேரமும் பணி செய்கின்றனர்.
  • அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
  • நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுவாக்க்க 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த சமயம் சுகாதார சேவைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன் 

இந்தியாவின் நிலை

உலகை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை தகவலின்படி இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 476 பேர் இந்தியர்கள், 43 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

அதிகபட்சமாகக் கேரளாவில் 87 பேரும், மகாராஷ்டிராவில் 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கடந்த மார்ச் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இரவு நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அப்போது மோதி தெரிவித்தார்.

''இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர், போக்குவரத்து, உணவு, ஊடகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் ஊரடங்கு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைத்தட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்கவேண்டும்'' எனவும் மோதி அந்த உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்துவதற்கு முன்பு மருத்துவர்களுடன் வீடியோ கான்பரசிங் மூலமாக ஆலோசனை நடத்தினார் மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: