You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு
நிர்பயா கூட்டுப் பாலுறவு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இன்று (பிப்ரவரி 1) நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று தடை விதித்த நிலையில் தற்போது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வினய் சர்மா தாக்கல் செய்திருந்த கருணை மனுவை நிராகரித்துள்ளார்.
தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி உள்ளிட்ட எந்த குற்றவாளிக்கும் நீதிமன்றம் பாகுபாடு காட்ட முடியாது. சட்ட ரீதியாக அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
நிர்பயா வழக்கின் பின்னணி என்ன?
2012 டிசம்பர் 16 அன்று டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.
மறுநாளான டிசம்பர் 17 அன்று முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் குமார் சர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது, 2013 மார்ச் 11 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
2013 செப்டம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: