You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரொனா வைரஸ் அச்சம்: சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் வெளியில் செல்ல கட்டுப்பாடு
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, மலேசியா, இலங்கை என்று ஆசிய நாடுகள் பலவற்றில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சீனாவுக்கு சென்று திரும்பி கோவைக்கு வந்த 8 பேரை பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், கோவையைச் சேர்ந்த 4 பேர், சென்னை மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர் நேற்று சீனாவில் இருந்து கோவைக்கு வந்துள்ளனர். இவர்களை பரிசோதித்துப் பார்த்ததில் இவர்களுக்கு கொரனோ வைரஸ் அறிகுறி இல்லை என தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனர்.மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது, 28 நாட்கள் பொது வெளியில் செல்லாமல் இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, சுகாதாரத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, இந்த எட்டு பேரும் தொழில் மற்றும் படிப்பு சார்ந்த காரணங்களுக்காக சீனாவுக்கு சென்று திரும்பியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: