You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு: ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கைது செய்யப்பட்டாரா? #BBCFactCheck
கர்நாடகாவின் மங்களூர் விமான நிலையத்தில் வெடிபொருள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிரும்போது, இந்த நபர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்த இரண்டு பேர் உள்ள ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அவர்களில் ஒருவர் மங்களூர் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் ஒரு இந்து என்பதால் இந்த நபரை 'பயங்கரவாதி' என்று அழைக்க மாட்டார்கள் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த கைது தொடர்பான பதிவுகளை இடுபவர்கள், இந்த நபர் ஒரு முஸ்லீமாக இருந்தால், அவர் தீவிரவாதியாக அறிவிக்கப்படுவார், ஆனால் அவர் ஒரு இந்து, எனவே அது நடக்காது என்று குறிப்பிடுகின்றனர்.
என்ன விவகாரம்?
ஜனவரி 20ஆம் தேதியன்று, கர்நாடகாவின் மங்களூர் விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத ஒரு பை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, பெங்களூரில் ஒருவர் சரணடைந்தார், அவருடைய பெயர் ஆதித்யா ராவ் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை உறுதிப்படுத்துவதற்காக மங்களூர் போலீஸை பிபிசி தொடர்பு கொண்டது.
எங்களிடம் பேசிய மங்களூர் காவல்துறை ஆணையர் பி.எஸ்.ஹர்ஷா, ஆதித்யா ராவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தொடர்பு இல்லை என முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆதித்யா ராவ் உடனான ஆரம்பகட்ட விசாரணையில் வெளிவந்த விஷயங்களை அவர் பிபிசியுடன் பகிர்ந்துக் கொண்டார்.
முதற்கட்ட விசாரணையின்போது இந்த நபர் புகழ்பெற்ற கல்லூரிகளில் இயந்திர பொறியியல் மற்றும் எம்பிஏ படித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று பி.எஸ்.ஹர்ஷா கூறினார். அவர் பல வங்கிகள் மற்றும் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
தனது திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று ஆதித்யா ராவ் விசாரணையில் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். பாதுகாப்பு காவலர் போன்ற வேலைகளையும் அவர் செய்துள்ளார். மங்களூர் விமான நிலையத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களைக் கொண்டு வரும்படி அவரிடம் கேட்கப்பட்டது, ஆனால் அவர் தனது வீட்டிலிருந்து மங்களூருக்கு சென்றபோது, அந்த வேலை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனால் கோபமடைந்த அவர், விமான நிலைய அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு முன்பே, பெங்களூர் மத்திய ரயில் நிலையத்தில் அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்பை செய்த அவருக்கு 11 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-இல் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இணையதளத்தில் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து சிறிய ரக உபகரணங்களை வாங்கி இந்த சாதனத்தை அவர் தயாரித்ததாக போலீசார் கூறுகின்றனர். ஜனவரி 20 காலை ஆதித்யா ராவ் இந்த சாதனத்தை மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் விட்டுவிட்டு ஆட்டோ ரிக்ஷாவில் கிளம்பினார்.
புகைப்படத்தில் இருப்பவர்கள் யார்?
சந்தீப் லோபோ என்பவரின் புகைப்படத்தை பதிவிட்டு அவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்றும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தட்சிண கன்னடம் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவில், மங்களூர் விமான நிலையத்தில் வெடிபொருள் தொடர்பாக சந்தீப் லோபோவின் படம் தவறாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக பிஜேபி தெளிவுபடுத்தியுள்ளது. தனது புகைப்படம் தவறாக சித்தரிக்கப்படுவதாக, சந்தீப் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சந்தீப் லோபே அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவர் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்தவர் என்றும் மங்களூர் போலீசார் தெரிவித்தனர்
இதுவரை நடந்தவை என்ன?
ஜனவரி 20 ஆம் தேதி மங்களூர் விமான நிலையத்தில், உரிமை கோரப்படாத ஒரு பை கண்டுபிடிக்கப்பட்டது, அதில் வெடிபொருளின் சில பகுதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
ஜனவரி 20 ம் தேதி, மங்களூர் விமான நிலைய டிக்கெட் கவுண்டருக்கு அருகில் உரிமை கோரப்படாத பைகளில் வெடிபொருட்களின் தடயங்களைக் கண்டறிந்ததாக சி.ஐ.எஸ்.எஃப் டி.ஐ.ஜி அனில் பாண்டே தெரிவித்தார்.
சி.சி.டி.வி காட்சிகளில் சந்தேக நபர் காணப்பட்டதாக போலீசார் கூறியதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஜனவரி 23 அன்று, ஆதித்யா ராவ் சரணடைந்ததாக மங்களூர் போலீசார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: