ஜே.என்.யு. பல்கலையில் முகமூடிக் கும்பல் வன்முறை; மாணவர் தலைவர் மீது கொடூர தாக்குதல்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் குழுமியிருந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களுடன், ஆசிரியர்கள் சிலரும் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த இரண்டு மாதங்களாக ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த செமஸ்டர் தேர்வுக்கான பதிவு தொடங்கியதை அடுத்து, அதை நிறுத்திவைக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர் சங்கத்தை சேர்ந்த சதீஷ் சந்திர யாதவ் என்பவர் நேற்று தாக்கப்பட்டுள்ளார். இன்று, அதைக் கண்டித்து மாணவர்கள் ஒரு பேரணி மேற்கொண்டபோது பாஜக சார்பு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரிய பெரிய கற்களைக் கொண்டு பேரணியில் வந்த மாணவர்களை கடுமையாக தாக்கியதாகவும், இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் ஒய்ஷி கோஷ் கடுமையாக காயமடைந்ததாகவும், அவரது முகம் முழுவதும் ரத்தக் களரியாகியுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றே மாணவர் ஜே.என்.யு. மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், தங்கள் மாணவர்களும் தாக்கப்பட்டதாகவும், இடது சாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் ஏ.பி.வி.பி. டெல்லி ஊடகப் பொறுப்பாளர் அஷுடோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த காவலர்கள் தாக்குதலில் இறங்கிய மாணவர்களைத் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே அடுத்து என்ன செய்வது என்று ஆலோசிக்க மாணவர் சங்கத்தினர் சபர்மதி விடுதி அருகே குழுமியிருந்தபோது, வெளியில் இருந்து பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததுடன், மாணவர்களையும் தாக்கியதாகவும் அவர் கூறினார்.

அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவரும், ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான என். சாய் பாலாஜி, ஒய்ஷி கோஷ் தாக்கப்பட்டு ரத்தம் சொட்டும் காட்சியை காட்டும் காணொளியை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்களே அவரைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எச்சரிக்கை: இந்தக் காணொளி உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால், முகமூடி அணிந்த குண்டர்கள் தம்மை தாக்கியதாக ஒய்ஷி கோஷை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

முகமூடி அணிந்த நபர்கள் பல்கலைக்கழகத்தில் தாக்குதலில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்றை ஏ.என்.ஐ. பகிர்ந்துள்ளது. அதில் "என்ன இது? யார் இது? பின்னாடி போங்கள், யாரை பயமுறுத்த பார்க்கிறீர்கள்? ஏ.பி.வி.பி.யே திரும்பிப் போ" என்பது போன்ற குரல்கள், வசைகளுடன் கேட்கிறது என்று ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.

போலீஸ் தலைமையகம் எதிரே போராட்டம்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தில்லி போலீஸ் தலைமை அலுவலகம் எதிரே இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

நிர்வாகம் அறிக்கை

தாக்குதல் நடந்த பிறகு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், "ஜே.என்.யு. சமூகத்துக்கு அவசரச் செய்தி. ஜே.என்.யு. வளாகத்துக்குள் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முகமூடி அணிந்த போக்கிரிகள், கையில் கழியுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொத்துகளை சேதப்படுத்துவதோடு, ஆட்களையும் அடிக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை பேண போலீசை அழைத்துள்ளது நிர்வாகம். அமைதியாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டிய நேரம் இது.

வளாகம் மிகப் பெரியது என்பதால் அவசரத்துக்கு 100 என்ற எண்ணையும் டயல் செய்யலாம். போக்கிரிகளை கையாளும் முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி காணொளி அதிர்ச்சி அளிக்கிறது. அச்சமூட்டுகிறது. முகமூடி அணிந்தவர்கள் ஜே.என்.யு. விடுதிக்குள் புகுந்து மாணவர்களை தாக்குகின்றனர். போலீஸ் என்ன செய்கிறது? போலீஸ் கமிஷனர் எங்கே? என்று கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனில் நாடு எப்படி வளரும் என்று கேள்வி கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

ஏ.பி.வி.பி. அறிக்கை

இடதுசாரி மாணவர் அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் சங்கம், டெல்லி மாணவர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், 25 மாணவர்கள் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும், 11 பேரை காணவில்லை என்றும் டெல்லி மாநில ஏ.பி.வி.பி. ஊடகப் பொறுப்பாளர் அஷுடோஷ் சிங் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜே.என்.யு. வளாகத்தில் நடந்த தாக்குதலுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

வன் செயல்களும், அராஜகமும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது உள்துறை அமைச்சகம்.

எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற பிரியங்கா

ஜவாஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 18 மாணவர்கள் காயங்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பார்க்க காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா வத்ரா வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: