You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன் - பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மு. க. ஸ்டாலின்
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று ஞாயிற்றுகிழமை அம்மாநிலத்தின் முதலமைச்சராக பணியேற்றார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் 11வது முதலமைச்சர் ஆவார்.
ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மூ, ஹேமந்த் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
44 வயதாகும் ஹேமந்த் சோரன், முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் 2வது மகன் ஆவார். அவருடைய அண்ணனான துர்கா சோரனின் அகால மரணத்திற்கு பிறகு ஹேமந்த் சோரன் அரசியலுக்கு வந்தார். முதலில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின் சட்டசபை உறுப்பினரானார். 2013ல் முதல் முறையாக அவர் ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.
இந்நிலையில், இன்றைய பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பேகல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ்வும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''சமூக நீதியை காக்கவும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவைகளுக்கு எதிராக போராடவும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை தேவை'' என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
அண்மையில் வெளியான ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில், மொத்தமுள்ள 81 தொகுதிகளில், 30 தொகுதிகளில் முக்தி மோர்ச்சா கட்சி வென்றது. காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- ராஷ்ட்ரியதளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: