You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத் என்கவுன்டர்: நடந்தது என்ன? - 10 முக்கிய அம்சங்கள்
ஹைதராபாத் கால்நடை பெண் மருததுவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
01. ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
02. இந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
03. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், ``ஆள்கடத்தல், திருட்டு, கூட்டுப் பாலியல் வல்லுறவை தொடர்ந்து கொலை செய்தது மற்றும் கிரிமினல் சதி'' குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக, நீதிமன்றக் காவல் அறிக்கையில் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.
04. இதற்கிடையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்யுமாறு தெலங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
05. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி குற்றம்சுமத்தப்பட்டவர்களை போலீஸார் அழைத்து சென்றுள்ளனர் என சைபராபாத் போலீஸ் ஆணையர் வி.சி.சஜநார் பிபிசி தெலுகு சேவையிடம் தெரிவித்துள்ளார்.
06. காவல்துறையினரின் துப்பாக்கியை பிடுங்க முயற்சி செய்தபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
07. இதில் காவல்துறையை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
08. இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் காலை 5.45 மணியிலிருந்து 6.15 மணி வரையிலான நேரத்தில் நடைபெற்றுள்ளது.
09. பெண் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் இந்த என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளது.
10. இந்த என்கவுன்டர் குறித்து சமூக ஊடங்களில் போலீஸாரை பாராட்டியும், என்கவுன்டர் என்பது ஒரு சரியான தீர்வாக அமையாது என்றும் கலவையாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: