மகாராஷ்டிரா அரசியல்: டிவிட்டரில் நையாண்டிக்கு உள்ளான அமித் ஷா

மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்திருக்கும் நிலையில் ட்விட்டரில் அமித் ஷாவை நையாண்டி செய்யும் ட்வீட்டுகள் பகிரப்பட்டு வருகின்றன.

பதவியேற்ற நான்கே நாட்களில் பட்னாவிஸ் பதவி விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக திடீரென பாஜகவுக்கு ஆதரவு தந்து துணை முதல்வர் பதவியும் ஏற்ற தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் ’மண்டியிட்ட அமித்ஷா’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் தமிழில் டிரண்டானது.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்று இழுபறி நீடித்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்க சிவசேனை கட்சி ஆட்சி அமைக்கும் என முடிவாக கூறப்பட்டது. ஆனால் இரவோடு இரவாக சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார்.

இது 'அரசியல் சாணக்கியர் அமித் ஷாவின் சாதுர்யம்' என்று சில ஊடகங்களும் வியந்து பேசின. சமூக ஊடகங்களிலும் இப்படி பலர் வியந்தனர்.

பாஜக சிவசேனை கூட்டணி உடைந்ததை கொண்டாடியவர்களுக்கு இது ஒரு பலத்த அடி என்றும்கூட சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவி விலகியிருக்கும் சூழலில் அம்மாதிரியான ட்வீட்டுகளை குறிப்பிட்டு அதற்கு எதிராக `மண்டியிட்ட அமித் ஷா` என்னும் ஹாஷ்டேகில் ட்வீட் செய்து வருகின்றனர் டிவிட்டர்வாசிகள்.

ஒரு சிலர் அமித் ஷாவை நையாண்டி செய்தும், சரத் பவாரை பாராட்டியும் ட்வீட்டுகளை பகிர்கின்றனர்.

மகாராஷ்டிரா அரசியலில் இன்று நடைபெற்ற பரபரப்புக்கு பிறகு சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனை கட்சித் தலைவரும் அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்துக்கான முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: