You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி தீர்ப்பை ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய மோதி
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: "அயோத்தி தீர்ப்பை தாமதப்படுத்தியது காங்கிரஸ்": மோதி
அயோத்தி தீர்ப்பை காங்கிரஸ் தாமதப்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோதி குற்றம் சாட்டினார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பலாமு மாவட்டம், டால்டன்கஞ்ச் என்ற இடத்தில் பாஜகவுக்கு ஆதரவு கோரி பிரதமர் நரேந்திர மோதி நேற்று (திங்கள்கிழமை) பேசியதாவது:
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு சிறந்த நிர்வாகத்தை அளித்துள்ளது. எனவேதான் மாநில வரலாற்றில் முதல்முறையாக ரகுபர் தாஸ் தலைமையிலான அரசு 5 ஆண்டு பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ளது. ஊழலை ஒழிக்க மாநில அரசு இரவு பகலாகப் பாடுபட்டது. மாநிலத்தின் தண்ணீர், வனம் மற்றும் நிலத்தை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பாதுகாக்கும். நக்சல் தீவிரவாதத்தை ஒழிக்க மாநில அரசு முயற்சி மேற்கொண்டது.
காங்கிரஸ் கட்சி காலம் தாழ்த்தும் உத்தியைக் கடைப்பிடித்து வந்தது. 370-வது சட்டப்பிரிவு பிரச்சனையை காங்கிரஸ் நிலுவையில் வைத்தது. நாங்கள் அதற்குத் தீர்வு காண்பதாகக் கூறினோம். அதுபோல் தீர்வு கண்டுள்ளோம்.
அயோத்தி பிரச்சனைக்குக் காங்கிரஸ் தீர்வு காண விரும்பியிருந்தால் முன்பே தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அதனை விரும்பவில்லை. அவர் கள் தங்கள் வாக்கு வங்கி பற்றி மட்டுமே கவலைப்பட்டனர். இப்போது அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் நாட்டுக்குச் சேவை செய்பவர்கள் மற்றும் கொள்ளை அடிப்பவர்களுக்கு இடையிலான தேர்தல் ஆகும். காங்கிரஸ் கட்சியிடம் பிரச்சனைகள் உள்ளன. எங்களிடம் தீர்வு உள்ளது. அவர்களிடம் குற்றச்சாட்டுகள் உள்ளன. எங்களிடம் நாங்கள் செய்த பணிக் கான அறிக்கை உள்ளது. அவர்களிடம் வெற்று வாக்குறுதிகள் உள்ளன. எங்களிடம் வளர்ச்சிக்கான ஆதாரம் உள்ளது.
சமூக நீதி, ஸ்திரத்தன்மை, சிறந்த நிர்வாகம், வளர்ச்சி, அனைவருக்கும் மரியாதை மற்றும் பாதுகாப்பு என்ற 5 கோட்பாடுகளில் பாஜக உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார், கும்லாவில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோதி வாக்கு சேகரித்தார்.
தினமணி: "தமிழகத்தில் வீசிய 5 புயல்களில் 359 பேர் பலி"
தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து வீசிய ஐந்து புயல்களால் 359 போ் உயிரிழந்துள்ளதாக, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் தொடா்பான ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் அண்மையில் சமா்ப்பித்தது. இந்த ஆய்வறிக்கையில், பல முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வீசிய புயல்கள், அதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களும் தரப்பட்டுள்ளன. அதன் விவரம்:-
கடந்த ஆண்டில் மட்டும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 13 காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகின. இது கடந்த 28 ஆண்டுகளில் உருவான தாழ்வு நிலைகளைக் காட்டிலும் அதிகமாகும். 2000-ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழகத்தில் ஆறு மிகப்பெரிய புயல்கள் உருவாகின. 2005-ஆம் ஆண்டில் மட்டும் ப்யாா், பாஸ் மற்றும் பனூஸ் என மூன்று புயல்கள் உருவாகி சேதங்களை ஏற்படுத்தின. 2008-ஆம் ஆண்டில் நிஷா புயல் உருவாகி மணிக்கு 102 கிலோமீட்டா் வேகத்தில் காற்று வீசி காரைக்கால் பகுதியைத் தாக்கியது. அதில், 189 போ் உயிரிழந்தனா்.
தானே புயல்: 2011-ஆம் ஆண்டு தானே புயல் உருவானது. இந்தப் புயலானது, கடலூா், புதுச்சேரியில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தின. 38 போ் இறந்ததுடன், பொதுச் சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின. இதன்பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும், 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் உருவான வாா்தா புயலில் 22 போ் பலியாகினா். பிறகு, 2017-ஆம் ஆண்டில் ஒக்கி புயல் உருவானது. இந்தப் புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் 42 போ் இறந்ததுடன், 185 மீனவா்கள் காணாமல் போனாா்கள்.
கஜா புயல் பாதிப்பு: ஒக்கி புயலுக்குப் பிறகு, தமிழகத்தில் கஜா புயல் மறக்க முடியாத சோகச் சுவடுகளை பதிவிட்டது. இந்தப் புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 52 போ் பலியாகினா். கடுமையான புயலிலும், உயிா்பலி குறைவாக இருந்தாலும், மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மிகையான அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டன.
புயல்களும் பலி எண்ணிக்கையும்...
நிஷா (2008)-------186 போ் பலி.
தானே (2011)-----57 போ் பலி.
வாா்தா (2016)-----22 போ் பலி.
ஒக்கி (2017)-----42 போ் பலி.
கஜா (2018)-----52 போ் பலி.
கற்றுக் கொண்ட பாடங்கள்: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் வீசிய கடுமையான புயல்களில் சிக்கி 359 போ் வரை உயிரிழந்துள்ளனா். இதுபோன்ற புயல்களில் இருந்து சில பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, புயல்கள் உருவாகுவதற்கு முன்பாக மாநில அரசுகள் முன் தயாரிப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். புயல் பாதிப்புகளை எதிா்கொண்டு மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
புயல் பாதிப்புகளை எதிா்கொள்ளத் தயாராகும் வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று புயல்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசுக்கு புயல்களை எதிா்கொள்வதற்கான பரிந்துரைகளையும் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
என்னென்ன பரிந்துரைகள்: தமிழகத்தில் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடா் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் விவரங்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். மாநில பேரிடா் மீட்புப் படை, தீயணைப்புப் படைகள் உள்பட இதர முகமைகளை வலுப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
பேரிடரின் போது தேடுதல், மீட்பு, முதலுதவி உள்ளிட்ட பணிகளில் நன்கு பயிற்சி பெற்ற திறன் படைத்தோரை ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக, தன்னாா்வலா்கள், பெண்கள் உள்ளிட்டோரை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்த பயிற்சி அளித்திட வேண்டும். பேரிடா் பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு உள்ளாகும் போது அவா்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் செல்ல சுமுகமான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். நிவாரணப் பொருள்கள் கொள்முதல், அவற்றை எடுத்துச் செல்லுதல், பங்கிடுதல் போன்ற பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள தனித்துவமான செயலாக்க முறையை ஏற்படுத்த வேண்டும்.
பேரிடா்களின் போது பாதிப்புக்கு உள்ளாகும் குடும்ப உறுப்பினா்களுக்குத் தேவையான பொருள்களை முன்பே பொட்டலமிட்டு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடா்களால் மீனவா்களும், மீனவக் குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுவா். எனவே, அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ளது.
தினத்தந்தி: "குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதம்: வங்கிகள் வசூலித்த அபராத தொகை ரூ.1996 கோடி"
குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காத வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2012-ம் ஆண்டு வரை பின்பற்றி வந்தது. பின்னர் நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் தொடங்கியது. இதில் அபராத தொகை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து அதை குறைத்து, 2017 அக்டோபர் 1-ந் தேதி முதல் வசூலித்து வருகிறது.
இதில் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.790.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னர் 2017-18-ம் ஆண்டில் அதிக அளவாக ரூ.3,368.42 கோடியை வங்கிகள் வசூலித்தன. இதன் தொடர்ச்சியாக 2018-19-ம் ஆண்டில், அதாவது கடந்த மார்ச் இறுதிவரை 18 பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.1996.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல்களை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார். இந்த அபராத நடைமுறையானது ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் - யோகி அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு
வட இந்தியாவில் குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், கடும் குளிரில் இருந்து அயோத்தியில் உள்ள பசு மாடுகளை காப்பாற்ற அவற்றுக்கு ஸ்வெட்டர் வாங்குவதற்கு உத்தரப்பிரதேச அரசு நிதி ஒதுக்கியுள்ளது குறித்த செய்தியை 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள பசுக்கள் முகாமில் உள்ள பசு மாடுகளை குளிரில் இருந்து காப்பாற்ற, அவற்றுக்கு சணலால் தயாரிக்கப்பட்ட ஸ்வெட்டர் வாங்குவதற்கு அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்டமாக பைசிங்பூரில் உள்ள பசுக்கள் முகாமில் இருக்கும் 1,200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பிளி, கையுறைகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் உத்தரப்பிரதேச மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குளிரில் வாடும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச ஸ்வெட்டர் இன்னும் வழங்கப்படாத நிலையில், பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை பலரும் விமர்சித்து வருவதாக இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்