You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கார்ப்பரேட் வரி 25.2 சதவீதமாக குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
உள்நாட்டு மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கோவாவில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''நிதி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச மாற்று வரி எனப்படும் மேட் வரியை தற்போதைய 18.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 15 சதவீதமாக குறைத்து உள்ளோம்'' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ''புதிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரியை குறைப்பது என்ற முடிவை இன்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.
வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கார்ப்பரேட் வரி, 30 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.
இந்நிலையில், எந்தவொரு வரிவிலக்கு உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்காத நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்படும். அரசிடமிருந்து ஊக்கத்தொகை அல்லது மற்ற சலுகைகளை பெறும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே கார்ப்பரேட் வரி 35 சதவீதம் இருந்த சூழலில் தற்போது அது 25 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
அதுமட்டுன்றி புதிதாக தயாரிப்பு தொழிலை துவங்கும் சில நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதத்திலிருந்து 15% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவித்தருகிறார்.
ஆண்டு விற்பனை 4 பில்லியன் ரூபாயாக உள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவீதித்தில் இருந்து 25.2 சதவீதமாக குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிலையில், இன்னமும் உலக அளவில் அதிக அளவு கார்ப்பரேட் வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
''மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 2019-20 நிதி ஆண்டின் வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய திருத்தம் சேர்க்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 1, 2019 அல்லது அதற்கு பிறகு பதிவாகும் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு , 15 சதவீதத்தில் வருமான வரி செலுத்த ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
''2019 ஜூலை 5-ஆம் தேதிக்கு முன்பு, (தாங்கள் வெளியிட்ட பங்குகளை, மீண்டும் தாங்களே வாங்கிக்கொள்ளும் ) பை-பேக் முறையில் பொது அறிவிப்பு வெளியிட்ட பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்கனவே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிறுவனங்களுக்கு எந்த வரியும் கிடையாது'' என்று நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு நிறுவனங்களுக்கு 30 சதவீதம் கார்ப்பரேட் வரியும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 40 சதவீதம் கார்ப்பரேட் வரியும், வெளிநாட்டு இந்தியாவில் விதிக்கப்படுகிறது. மேலும், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான கூடுதல் வரி 4 சதவீதம் விதிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்