You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
73 வயது பெண் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம்
ஆந்திர பிரதேசத்தில் 73 வயது பெண்ணொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் எரமாட்டி மங்காயம்மாவுக்கு இந்த குழந்தைகள் பிறந்தன.
தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். அடுத்த 21 நாட்களுக்கு இந்த குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படும் என்று மருத்துவர் உமா சங்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தனது ஐவிஃஎப் சிகிச்சை மையத்தில் மருத்துவர் உமா சங்கர், மங்காயம்மாவுக்கு கடந்த 10 மாதங்களாக சிகிச்சை அளித்து வந்தார்.
ஐவிஃஎப் எனப்படும் சோதனைக் குழாய் கருத்தரித்தல் முறை மூலம் இதே பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணொருவர் சமீபத்தில்தான் தாய் ஆனார்.
தனக்கு குழந்தை பிறந்திருப்பதால் மகிழ்ச்சி தெரிவித்த மங்காயம்மா, "எனது வாழ்வில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். வலி மிகுந்த பல அனுபவங்களை நான் கடந்து வந்துள்ளேன். இப்போது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன" என்று கூறினார்.
"நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக உள்ளோம். இந்த மருத்துவர்களால்தான் இது சாத்தியமானது. பலமுறை பல மருத்துவமனைகளுக்கு சென்று நாங்கள் முயற்சி செய்துள்ளோம். இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்று இந்த மருத்துவமனைக்கு வந்தோம். இரண்டு மாதங்களில் எனது மனைவி கருத்தரித்தார். கடந்த 9 மாதங்களாக நாங்கள் இந்த மருத்துவமனையில் உள்ளோம். "குழந்தை இல்லாதவர்" என்று மக்கள் என்னை குறைகூறவதுண்டு. இப்போது இந்த கூற்று பொய்யாகிவிட்டது. இந்த குழந்தைகளை நன்றாக கவனித்து கொள்வேன்" என்று மங்காயம்மாவின் கணவரான சீத்தாராம ராஜாராவ் தெரிவித்தார்.
இந்த தம்பதியர் ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நெலபர்திபாடு கிராமத்தை சேர்ந்தவர்கள். 1962ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம்தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துகொண்டனர்.
இதற்கு பின்னர் இந்த தம்பதியர் சோதனைக் குழாய் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்தனர். கடந்த ஆண்டு குண்டூரிலுள்ள இந்த சிகிச்சை மையத்திற்கு வந்த இவர்களுக்கு, எல்லா பரிசோதனைகளையும் செய்த மருத்துவர் உமா சங்கர், சோதனைக் குழாய் கருத்தரித்தல் முறை மூலம் சிகிச்சையைத் தொடங்கினார்.
மங்காயம்மாவுக்கு மாதவிடாய் நின்றுபோய்விட்டதால், இன்னொரு பெண்ணின் கரு முட்டையை வாங்கி, அதில் சீத்தாராமா ராஜாராவின் விந்துவை செலுத்தி கருத்தரிக்க செய்துள்ளனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்