ப.சிதம்பரம் திகார் சிறை செல்கிறார்: செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார்.

சிறை அதிகாரிகள் தனக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், சிறையில் பாதுகாப்புடன் கூடிய தனி அறை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென ப.சிதம்பரம் கோரினார்.

சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் போதிய பாதுகாப்புடன் கூடிய தனி அறை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அமலாக்க துறை தொடர்ந்த வழக்கில், சரணடைய ப. சிதம்பரம் விரும்புவதாக தொடுத்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

"இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க முடியாது. குறிப்பாக பொருளாதார குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதி பானுமதி தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் சமர்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன் ஜாமின் வழங்கப்பட்டால், தற்போது நடைபெறும் விசாரணை பாதிக்கப்படலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பாக சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆகஸ்ட் 22ஆம் தேதியில் இருந்து அவர் சிபிஐ காவலில் இருந்து வருகிறார்.

சிபிஐ நீதிமன்றம் அவரது காவலை இரண்டு முறை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு திரும்பிப் பெறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: