தாஹில் ரமானி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு இடமாற்ற பரிந்துரை - மறுபரிசீலனை நிராகரிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கம்லேஷ் தாஹில் ரமானி, மேகாலயா உயர்நீதின்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யவும், மேகாலயாவின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தாஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடம் மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி பரிந்துரைத்தது.
இது தொடர்பான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு, வி.கே. தாஹில் ரமானி கொலீஜியத்தை கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவரது கோரிக்கையை கொலீஜியம் மிகவும் கவனமாக ஆராய்ந்தாலும் பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொண்டு தாஹில் ரமானியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் அவரை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முந்தைய பரிந்துரையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் கொலீஜியம் செப்டம்பர் 3-ஆம் தேதி கூறியது.

பட மூலாதாரம், The India Today Group
இதேபோல, தற்போது மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே. மிட்டல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை அடிப்படையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பான உத்தரவை விரைவில் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாஹில் ரமானியை மாற்றக் கோரும் பரிந்துரையை வழங்கிய கொலீஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில் ரமானி, 2015லிருந்து 2017ஆம் ஆண்டு வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

பட மூலாதாரம், RAJ BHAVAN
சென்னை உயர் நீதிமன்றம் போன்ற பெரிய உயர் நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் பொதுவாக, மிகச் சிறிய நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்யப்படுவதில்லை என்பதால், தாஹில் ரமானியின் இடமாற்றம் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
"சட்ட ரீதியாகப் பார்த்தால் இதில் எந்தத் தவறும் இருப்பதாகச் சொல்ல முடியாது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் முடிவே இறுதியானது" என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஹரி பரந்தாமன்.
"தாஹில் ரமானி தற்போது நாட்டில் உள்ள மிக மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர். 2001ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆனவர். உச்ச நீதிமன்றத்திற்கே சென்றிருக்க வேண்டியவர். இம்மாதிரியான சூழலில், ஒருவர் சிறிய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட மாட்டார்கள். ஆனால், அப்படி மாற்றப்பட்டால் ஒன்றும் செய்ய இயலாது" என்கிறார் அவர்.

தற்போது இந்தியாவில் உயர் நீதிமன்றங்களை பொறுத்தவரை, இரண்டு பெண் தலைமை நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். தாஹில் ரமானியைத் தவிர, ஜம்மு - காஷ்மீர் மாநில தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் இருக்கிறார்.
நாட்டின் மிகப் பழைய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம் 75 நீதிபதிகளைக் கொண்டது. 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மேகாலயா உயர் நீதிமன்றம் 3 நீதிபதிகளை மட்டுமே கொண்டது. தற்போது தலைமை நீதிபதி உள்பட இரண்டு நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேகாலயா உயர் நீதிமன்றம் இந்தியாவின் மிகச் சிறிய உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது சுமார் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேகாலயா நீதிமன்றத்தில் சுமார் ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












